Friday, January 30, 2009

நான்..முத்துக்குமார் பேசுகிறேன்..!

ஈழமே பார்த்து எரிகிறேன் ஆங்கே
என்னடா என்னடா துயரம்?
வாழவே இங்கு மனமெதும் இல்லை
வையகம் காட்டுமென் உயிரை
ஏழுகோ டியாய் இருந்துமே அந்த
எங்குலக் குடிகளுக் கழிவோ?
சூழுமென் உடலின் தீயொடு தமிழா
தெரிந்திடு மானிடத் தர்மம்!

இந்தியக் குருடு இருவிழி திறக்கார்
இந்நிலை வந்ததே இன்னும்
பந்தியில் சிங்கப் படையுடன் நின்றே
பண்தமிழ் உயிர்களைக் கொன்றார்
வெந்தது மண்ணே வீசிடும் சதைகள்
விசிறிக் கிடப்பதைப் பாரீர்
குந்தியே இருக்கக் கொள்ளுமா ஆங்கே
குலக்கொடி கதறுதே காணீர்!

இரசீவின் கொலையில் இராட்சதச் சிக்கல்
இருப்பது செயன்குழுத் தீர்ப்பு
உரசியே காணா உண்மைகள் புலியின்
இடாப்பிலே இடுதலோர் இழிவு
அரசியல் ஆப்பு அடுக்கிய பணத்தின்
அட்டிக னானது அறிவீர்
குரலிதைக் கொள்வீர் கொடியவர் நாளை
குலத்தமி ழகத்தையும் கொல்வார்!

இன்றுநான் எரிவேன் என்னுடற் பிழம்பு
இனத்தமிழ் விழிகளைத் திறக்கும்
ஒன்றுகேள் தமிழீர் உம்மைநீர் ஆள்வீர்
இல்லையேல் தில்லியே அழிக்கும்
என்னுடல் மேவி எழுந்திடும் நெருப்பு
இதயமெல் லாமுமாய் எரியும்
வென்றுவா பிரபா வேங்கையின் மைந்தா
முத்துக்கு மாரிவன் மொழிந்தான்!

வேறு

வீரமகனுக்கு வீரவணக்கம்


ஈழமணி நிலத்துயரை நெஞ்சில் ஈர்த்து
எரிந்துவிட்ட முத்துகுமார் என்றும் வாழ்வான்
ஆழமொடு அஞ்சலியை அளித்தோம் என்றே
அரசியலார் நடேசன் அறிக்கை தந்தார்
சூழுலகம் வீரமகன் தியாகத் தீயில்
சேர்ந்தெரிந்தார் வையமெலாம் சீறக் கண்டோம்
மேழியெனத் தமிழ்நிலத்தை உழுதா னுக்கே
வீரவணக் கம்மிட்டு விடையே வைத்தோம்!

Puthiaparathy

No comments:

Post a Comment