Saturday, December 27, 2008

தேசகாவியத்தில்

தேசகாவியத்தில் சிறுபக்கம்: 2007இல் எழுதப்பெற்றது

(1)

இன்பத் தமிழும் அன்புப் புலவனும்..!

(அறுசீர் விருத்தம்)

கனடிய நாட்டில் வந்தேன்
காலத்தின் பதிவாய் ஓடும்
மனதினில் என்னைப் பெற்ற
மண்வயம் உதயம் செய்யும்
அனையபொன் கோடை ஒன்றில்
அலையுளம் வெப்பம் கொள்ள
சுனைக்கரை தேடிச் செல்லச்
சென்றிடும் கோடை நாட்கள்!

வாவியின் மேற்கே வானை
வரைந்திடும் கட்டி டங்கள்
தேவதை போலப் பெண்கள்
திரிந்திடும் தீவுச் சோலை
காவலே இல்லை மாந்தர்
களித்திடும் நீரின் ஓரம்
போவதும் வருதல் ஆகப்
பெருங்கலத் துறையே உண்டு!

சாலையின் வீதி மீது
சந்திரக் கலசம் போல
நீலமாஞ் சிவப்பு பச்சை
நிறத்தொடு வாக னங்கள்
பாலமாம் மீதி லோடிப்
பறந்திடும் பார ஊர்தி
ஞாலமாம் சிறந்த நாட்டை
ஞாபகம் ஊட்டிச் செல்லும்!

விண்வெளி உயர்ந்த மாடம்
விளைந்திடும் நற்பண் டங்கள்
கண்தொறும் உலகம் பல்லாய்
கனிவிடும் மொழியின் மாந்தர்
உண்டெனில் நூற்றில் மேலாம்
உலவிடும் மொழிகள் பேசக்
கொண்டது ரொறன்ரோ ஆட்சி
குவலயம் போற்றும் செவ்வூர்!

அரசியற் தமிழர் கற்கும்
அறிவியல் சாலை எங்கும்
சிரசிடும் தமிழர் கூட்டம்
சிந்தையில் வந்த நாட்டின்
வரமென மனிதம் கண்டு
வருகிறார் அதனால் நாட்டு
உரமென தொழில்சார் கண்டு
உயர்ந்தது கனடா நாடு!


இனத்தினில் பாகு பாடு
இல்லவே இல்லை நுட்பம்
கனத்திலே கற்றோர் கூடிக்
கனமிடும் பொருளா தாரம்
வினைத்திறன் கொண்டோர் யாரும்
விதமொரு வணிகம் காண
நினைத்திடில் வழியே காட்டும்
நிசத்தினில் இதுபொன் நாடே!!

சொந்தமா ஈழம் போல
தெருவெலாம் கோவில் உண்டு
கந்தன்வி நாயகர் துர்க்கா
காளியாம் சிவனென் றோதி
இந்தவோர் மண்ணும் எல்லா
இறைவனின் மகிமை சேர்க்கும்
சிந்தெனப் பதிகம் பாடச்
சேர்த்தது மனிதத் தேசம்!

உள்ளமார் தமிழில் ஏடு
உண்டொரு பத்து மேலாம்
அள்ளுமார் அலையாய் வானில்
அசைதரும் ஒலிகள் சாலை
துள்ளிட வந்து நிற்கும்
தொலைதரும் ஒளியும் இந்த
வெள்ளையர் நாடு கண்ட
வித்துவம் இந்நாள் அன்றோ!

கனரக ஊர்தி கண்டார்
கார்வயல் நிலங்கள் கண்டார்
மனையெலாம் சொந்த மானார்
மதித்தமிழ் கூட்டம் என்றால்
தினவெனத் திரண்டு நிற்பார்
தீந்தமிழ் உறவோர் எங்கள்
இனவழிப் பதனைச் செய்யும்
இலங்கையை எண்ணி நொந்தார்!

சிந்தையில் அழுவேன் மண்ணின்
துயரினில் அழுவேன் ஆட்சிக்
கந்தகத் தழுவேன் ஓலம்
கண்டுகண் டழுவேன் எந்தன்
வெந்தவோர் விழியின் நீரை
விரைவுநீர் வழியே விட்டு
எந்தநாள் மீட்சி யென்றெ
எண்ணிநான் இருப்பேன் ஆங்கே!

(2)
ஏகாந்தம்

(புலவனுரை: எண்சீர் விருத்தம்)
இப்படியா கத்தானே இருப்பேன் அந்த
ஒன்ராறி யோவாவி உற்றுப் பார்ப்பேன்
கொப்புளிக்கும் கூர்ப்படகுக் கோலம் காட்டும்
கொக்குக்கள் போல்திரியும் தோணிக் கூட்டம்
ஒப்புவிக்கும் என்தேச உணர்வு கொள்வேன்
ஓடுமனம் ஓடிவரும் உயிரின் வாதை
தொப்புளுற வானதொரு தாயின் மண்ணை
தினவெடுக்கும் மனச்சிறகாய் தேயும் நாட்கள்!

வாவிகடல் போலிருக்கும் வற்றா ஊற்றின்
வரைகடந்து போய்நின்றால் வான்ம ரங்கள்
பூவடங்கப் போர்த்திருக்கும் பொதிகைப் பூக்கள்
பெருந்தூரல் காற்றலைக்கப் போடும் கூத்தாம்
காவடங்கும் நீர்த்தடங்கள் கவிந்து தோன்றும்
கட்டழகுச் சிறுவருலா கலங்கள் செல்லும்
ஓவியங்கள் என்மனதில் உளியே கேட்கும்
உயிர்ப்படலம் வற்றாத உருவாய் நிற்கும்!

வாத்துக்கள் கோர்த்துவரும் வடிவம் கோடி
வாரலகில் உணவுக்காய் வாஞ்சை காட்டும்
நேத்திரத்தில் உணவிட்டு நிற்கும் மாந்தர்
நிசத்திலே காண்பேன்யான் நினைப்பேன் முற்றும்
ஆத்திரத்தில் சிறிலங்கா அரசின் ஆட்சி
அவலமிடக் குண்டெறிந்து அவலம் வைக்கும்
கூத்தினிலும் உணவின்றிக் குதர்க்கம் பேசும்
கொடுமையிலும் மனம்நோகக் குறிப்பேன் நாட்கள்!

கத்துகடற் கரையோசை கதைக்கும் போதும்
கனிமழலைச் செஞ்சோலை களிக்கும் போதும்
முத்துமணி நாரியர்கள் முகமன் நேர்த்தி
மெல்லியரின் இடைகோர்த்து முத்தம் ஈயும்
புத்தெழிலைப் பெருங்காதல் பேசும் காளை
பூம்புகலைப் பார்த்திருப்பேன் பெற்ற நாட்டில்
செத்துப்போ என்றுசொல்லி பேசும் ஆட்சிச்
சிங்களத்தை எண்ணிமனம் செத்துப் போவேன்!

(3)
செப்புசிலை

(புலவன் பேசுகிறான்:
சமநிலைச் சிந்து-கண்ணிகள்)

நேற்றொருநாள் அந்தியிட்ட
நிலவொளியில் நானிருந்தேன்
காற்றுக்கும் வீச்சுவந்து
காலின்றித் திரிந்ததுபார்
வார்த்தைகள் இன்றியெழில்
வஞ்சிமக ளொருத்திவந்தாள்
தோற்றதுபார் எதிர்ப்புக்கள்
தோகையுளம் சிலிர்ப்புக்கள்!

விண்ணிலொரு வட்டநிலா
வென்னருகே பட்டுநிலா
மண்ணழகின் புற்றரைகள்
மடிப்புக்கள் தான்கட்டில்
கண்மருவும் கார்விழியில்
கற்பனைகள் அற்புதங்கள்
எண்ணங்கள் இறக்கைகட்டும்
ஏந்திளையாள் நடந்துவந்தாள்!

செவ்வரத்தம் பூச்செருகி
சேலையிட்டு நடைபழகி
கொவ்வையிதழ் நிறத்தோடு
கூடவந்தாள் பேரழகி
மப்புமயில் வார்மேகம்
வந்துவிடத் தானாடும்
செப்புசிலை மயிலழகால்
சிவநடனம் ஆடுகிறேன்!

தத்தித்தோம் ததிங்கிணத்தோம்
தாளமொடு சதங்கைதரும்
சத்தத்தின் வாரிசைகள்
சதிரோடு அவள்நடந்தாள்
கத்துங்கிளி கனிமொழியாள்
கன்னலெனும் தமிழினியாள்
புத்தகத்தை மேய்வதுபோல்
புலவனெனை மோதுகின்றாள்!

காதோடு தூக்கணங்கள்
காம்பவிழா வார்தனங்கள்
வாதாடு கின்றதமிழ்
மணிக்குயிலின் கீர்த்தனங்கள்
போதாகி மலர்ந்தமுகப்
புன்னகையோ ஒளிப்பரல்கள்
மாதுளைக்கு ஆடையிட்ட
வாழ்வியலின் தத்துவங்கள்!

நூலரும்பும் இடைமருவி
நிலவாழைக் கால்களிடும்
வாலைமகள் தாமரைப்பூ
வார்சேலை மறைந்திருக்கும்
நீலமணி விழிப்பரல்கள்
நெற்றிமணி பொற்பதக்கம்
கோலமகள் நடைபயில
கோவலன்யான் பார்த்திருந்தேன்!

பாரடங்காத் தேசமிது
பகல்போலி ருக்குமொளி
நீரடங்கும் சூரியர்போல்
நீந்திவரும் ஒளிக்கோலம்
சாரல்மகள் நோக்கிமனம்
சந்திக்கப் போகிடலோ
வாரலையில் நீந்திநிற்பாள்
வந்தெனையேன் வாட்டுகிறாள்!

நினைவுகளில் தூங்கியொரு
நிலமடந்தை என்மடியில்
கனவுகளில் மிதப்பதுவோல்
கண்டேனே ஒருகாட்சி
எனைத்திருத்தி விழித்தெழுந்தேன்
ஏந்திளையாள் தூரலிட்ட
மனத்துளிகள் அவள்நடக்கும்
வழியோரம் பார்த்துநின்றேன்!


(4)
அவள்

(புலவன் பேசுகிறான்: சிந்து-அறுசீரிரட்டை)

வான்மழையில் நனைந்ததென்ன மரகதங்கள்-என்னை
வாவென்று அழைப்பதென்ன பாற்குடங்கள்
தேனிதழின் தோடையிடும் காவியங்கள்-அவள்
திருக்கரத்தில் எத்தனைதான் ஓவியங்கள்

நானிருருந்து பாடுமிசை நடைபயின்றாள்-அந்த
நாட்டியத்தில் பூங்கூந்தல் அசையநின்றாள்
மான்மருளும் கார்விழியில் வாஞ்சையிட்டாள்-அந்த
மண்மகளாள் சாயலிலே நெஞ்சமிட்டாள்!

ஆடைகட்டி வந்ததென்ன அம்புலியோ-அவள்
ஆசைகொண்டு நிற்பதென்ன என்கவியோ?
மேடைகட்டி நிற்குதடா தெங்கிளநீர்-அவள்
மேலாடை வானவில்லு என்குதுபார்!

மீனாட்சி சிலைபோலும் வீற்றிருப்பாள்-அருள்
மேவிவரும் துர்க்காவாய் நின்றிருப்பாள்
மானாட்டம் துள்ளிவரும் நர்த்தனங்கள்-தோகை
மயிலாட்டம் முந்தானை நாட்டியங்கள்!

மூக்குத்தி ஒளிவீசும் முகச்சுடரோ-கருணை
முகத்தோடு அருள்கூரும் அகச்சுடரோ
நாக்குநுனி அழகோடு இதழ்கனியும்-அவள்
நறுந்தமிழோ குயிலாகி இசைதவழும்!

பொட்டிட்ட மதிமுகமோ பூமிநிலா-மாறாப்
பொன்னொளிரும் கதிரொளியோ தேவிஉலா
கட்டுடலம் கண்டாங்கிக் கரையழகோ-அவள்
காலடிகள் எனையழைக்கும் நிரையழகோ?

இப்படியோர் ஏந்திளையாய் இங்குவந்தாள்-அவள்
ஏனெந்தன் முன்னழகைக் காட்டுகிறாள்
கொப்புளிக்கும் மனவுணர்வைக் கொள்ளவைத்து-எழிற்
கோலமயில் சில்நொடியில் மறைந்திடுவாள்!

(5)
ஈழமண்

(புலவன் கூறும் பொன்மகள்: கும்மி)

மங்கைதன் வாரெழில் வாவென்று ஆர்த்திட
மாதவம் செய்ததென் மாண்பது வோ?
அங்கைகள் மாருதி ஆர்கலை யாக்கிடும்
அழகி யாமெந்தன் பாமக ளோ?

செங்கைய ளைந்தெனை சேர்த்துமே போர்த்திடும்
செல்வமோ பூஞ்சிறை யன்னமோ தான்?
நங்கைய ராகப்பி றந்தெனை ரம்பையாய்
நாடிடும் தாரகை மின்மகள் தான்!

ஆடல்ப யின்றவள் ஊடல்ப யின்றவள்
ஆடவன் என்னெதிர் ஆடுகி றாள்
தேடல்ம கற்குழல் கோதிய ழைந்தெனை
தேனாம கிழ்ந்திடப் பாடுகி றாள்

நாடுவெ ழுந்தொளிர் நற்றமிழ் நங்கையா
நற்கவி யாளாநான் ஆர்கில னே?
கூடுதி றந்திட்ட கூந்தற்புட் காந்தளா
கொண்டதோர் மாதுவா ஓர்கில னே?

கீதமி சைத்தவள் பாதம சைத்தவள்
தீயைமி தித்தவள் போலநின் றாள்
கூதல கப்பட கூடுமோர் நாட்டிலே
கொள்கைவ யப்பட வில்லையென் றாள்!

பேசாம டைந்தையள் பேசின ளேயவள்
பிஞ்சுகு யிற்குரல் பேசின தே!
வீசக்கார் வான்மழை வீழ்தல்போல் கண்களில்
வீழும்ம டைகொட்டி வீழ்ந்தது வே!

ஏனடி யார்மகள் ஏங்குவ தோவெந்தன்
ஏந்திழை யாள்மொழி சிந்துவ தேன்?
போனபி றப்பிலே பூத்தவ ளோவெந்தன்
பொன்னெழி லேகண்கள் பொங்குவ தேன்?

என்றதென் வாய்மொழி ஏற்றவள் ஏற்றுமே
இன்னல்க யாவுமே சொல்லிவைத் தாள்
பொன்மக ளாற்றிய பேசும்மு கத்திலே
பொங்கிடு மீழமண் சொல்லிநின் றாள்!

(6)
தேன்தமிழ் மானீரோ?

(சந்தக்கலித்துறை)

பொன்மக ளென்னுயிர் பூம்புக ழீழமே பித்தாகி
இன்புறச் செந்தமிழ் ஏற்றிடும் பாவல என்னானாய்
பின்புற மென்னவே பெற்றதுன் தாயகம் விட்டீரே
சென்றனை நீயொரு சிந்தனைத் தேன்தமிழ் மானீரோ?

மன்னுயிர் வாட்டிட மண்ணினில் கொன்றிடும் மாபாதம்
தன்வய மானம கிந்தரால் தூவிடும் தறிபோதம்
கொன்றுகு வித்திடும் கூற்றமாய் நின்றிடும் கோமுட்டி
நின்றுவெ ரித்திடும் நிட்டுர மெத்தனை நீபாராய்!

செங்குரு திப்புயல் சிந்துதே என்நிலம் சேறாகி
இங்கொரு நாளையில் இத்தனை மாந்தரி ழப்பாமோ?
பொங்குத மிழ்க்குரல் பூத்திடு முன்கவி பேசாது
எங்குநீ யுற்றனை இத்திட லாமுந்தன் இன்தாயோ?

வந்துபி றந்தவர் அத்தனை பேரதும் வார்ப்பாகி
இந்தபி றப்பிலே எங்களின் தாயகம் என்றாக்கி
கந்தகப் போரினை கண்டவர் எங்களைக் காப்போரை
எந்தபி றப்பிலே இங்குநீ வந்தவன் ஈர்ப்பாயோ?

இன்னுயிர் ஈந்துமே எங்களின் மாதரும் இந்நாளில்
தன்கொடை யாக்கிய தங்கமாம் போரணி யானாரே
வன்படைச் சிங்கள வல்லவர் தீங்கதின் வன்தீயை
மென்மகள் ஏந்திய வெங்கள ஆயுதம் மீட்கும்பார்!

மானமெ னுங்கடல் மாதவர் தேர்ந்திடும் மற்போரில்
ஈனம கிந்தனின் தீப்படை எரிந்திடத் தீயாகும்
வானத மிழ்தனில் வார்கவி யாற்றிடும் பாவோனே
கானமி சைத்திடக் காண்படை யாமதைக் காணாயோ?

என்றவள் நீள்கடல் ஏகிடக் கண்டவள் இந்நாளில்
சென்றவள் மீண்டுமோர் சிந்துர மாலையில் சேர்ந்தாளே
மின்னவள் நோக்கிய வேளையில் காந்தளின் பொற்பாவை
அன்னம கிழ்ந்திட வென்னுரை யாக்கியே நின்றேனே!



(7)
துட்டப்பர் எண்ணிய தேவி!

(காவடிச்சிந்து0

என்னடி யழகெனும் பெண்ணே-என்
கண்ணே-நிலப்
பண்ணே-அடி
ஏனடி வந்தனை விண்ணே
எழுவான்கதிர் எழிற்காலையும் இதமாய்வளர் மகிழ்மாலையும்
எண்ணமெ லாமெந்தன் மண்ணே-அடி
தன்மான மென்றெனக் குண்டே!


கானப்புலி யெனவே காட்டி-காலம்
ஓட்டி-விசை
நீட்டி-களம்
கண்டதோர் விடியலை மாட்டி-எங்கள்
களமாமிசை தனியேவிட காண்பாயொரு கருணாவென
கண்டவன் இல்லடி நானே-இவன்
கனித்தமிழ்; பெற்றவன் மானே!

மானிடம் என்றவர் சொல்வார்-கவி
விள்வார்-வீசு
சொல்லார்-அந்த
மகத்துவம் எதுவுமே இல்லார்-நீள்
மணிநாடெலாம் எலிபோன்றவர் தமிழீழம் குழிதோண்டுவர்
மாக்களைப் போலில்லை நானே-இவன்
மக்களின் கவிஞன்பார் மானே!

போரிடும் தன்னினம் வீழ்த்தி-குழி
யாக்கி-இடர்
தேக்கி-அடி
போதையில் வருமிவன் நோக்கி-கொஞ்சம்
பாராயடி பதரேயெனும் பகைக்காலடி மிகக்காவிடும்
ஒட்டுத் தமிழனை எண்ணு-இழிவு
தொட்ட விதியவன் கண்ணு !

பற்பல காலத்துக் கொலையார்-குழு
வலையார்-சுத்த
வெறியார்-தந்த
பற்பல துரோகத்துக் கறையார்-தமிழ்
பதமென்றவர் பண்பாடிட பகல்வேசத்தில் உறையானவர்
பாட்டென்று எழுதுவான் இங்கே-அந்தப்
பாட்டுப்போல் நானில்;லைச் சங்கே!

என்னுரை கேட்டனள் மாது-எண்ணும்
போது-கண்டாள்
தாது-ஈழம்
மென்னுமோர் எங்களின் வேது-எதிரி
இழிவானவர் பணமாடிடப் பழியானவர் எழுத்தாடிடும்
எட்டப்பம் மார்ந்திட நின்றாள்-அந்தத்
துட்டப்பர் கண்டுமே நொந்தாள்!

(8)
வரிசையில் துரோகி வந்தானடா!

(தமிழ்மகள் மீண்டும் வருதல்)
(அறுசீர் விருத்தம்)

என்னுரை கேட்டாள் மாது
எழுந்துமே சென்றாள் மீண்டும்
இன்றவள் வந்தாள் மூன்று
இதயநாள் கனத்தேன் என்றாள்
பொன்மகள் வேங்கை யான
பூக்குமா ஈழ மண்ணில்
தன்னினம் கொல்லும் துக்ளஸ்
தருக்கனும் வந்தான் என்றாள்!

ஊரெலாம் தேடித் தேடி
உலுத்தர்கள் திரிகின் றாரே
கூரவன் டக்ளஸ், என்பான்
கொழுத்தபே ரரக்கத் தோடு
சேரவே கொலைகள் செய்யும்
சிறுமையன் கண்டேன் வெற்றி
வாரெதிர் கொள்ளும் இந்த
வரிசையும் துரோகி வந்தான்!

அன்னையர் கொன்றான் சின்ன
அரும்பினர் கொன்றான் தந்தை
மன்னுயிர் கொன்றான் துள்ளும்
வயதினர் கொன்றான் மாதர்
பொன்னுயிர் கொன்றான் கெட்ட
பிறப்பினான் மீண்டும் வந்தான்
என்னுயிர் நிலத்தில் இந்த
இழிபடை சரிதம் வைத்தான்!

வெறியனாய் வந்தான் போதை
விசரனாய் வந்தான் கொல்லும்
குறியனாய் வந்தான் வீச்சுக்
குருதிவாள் கொண்டான் முற்றும்
வறியவர் குடும்பம் என்னும்
மனிதமே சற்றும் காணான்
அறிவது இல்லாப் பேய்போல்
அரிப்படை யாழில் கொண்டான்

பாவல கொஞ்சம் கேளாய்
பழித்திடும் கொலைமா வேடர்
கேவலம் தன்னை எண்ணாக்
கீழ்த்தர வரக்கர் நாளும்
சாவலம் கொடுத்தார் இந்தச்
சகதியில் தமிழர் செத்தார்
ஆவது ஒன்றும் இல்லை
அமைதியம் பொறுப்பும் ஏனோ?

(9)
வென்று வென்று...

(இலாவணி)

கார்குழலின் வார்குழலி வார்த்தெடுத்த பொற்சிலையே
கஞ்சமலர் பொற்பதத்தின் கானமயில் கண்டுகண்.. டு
சார்மனதில் சாற்றுகிற காதலினால் மோதலுற்று
சாரலிலே புலவனெதிர் சஞ்சரிக்கும் வண்டுவண்.. டு

நீகொடுத்த புத்தகத்தில் நீந்தியொரு ஈழமண்ணில்
நெஞ்சினிலே வாட்டுகிற நிட்டுரத்தை எண்ணியெண் ணி
தீகொடுத்த மாளிகையின் தீம்பிழம்பில் விடுதலையின்
தூரலிலே பாவடிக்கும் தேசனடி வண்டுவண்.. டு

காலமகள் தொட்டிலிலே கார்தமிழே இசையேற்ற
கரிகாலன் பிறந்துவந்த களமாந்தர் வெற்றிவெற்..றி
ஞாலமதில் தமிழீழம் நாளையிடும் போதிலொரு
நாதமென நின்றிருக்கும் நற்கொடையின் பெற்றிபெற்.. றி

கூரரக்கம் சிங்களத்தின் கொடுமையிலே மீட்டெடுக்கும்
கொஞ்சுநிலப் போர்ப்பறையின் கூதலிலே நின்றுநின்.. று
போரரக்கர் ஆட்சியது போட்டுவரும் குண்டுகளில்
பெட்புலிகள் மீட்சியிடும் பொழுதுவரும் வென்றுவென்.. று

பொன்மகளே செந்தமிழே பிறையாரும் நுதலாளே
பெரும்தாயே சஞ்சலமேன் பிரபாவுன் பிள்ளைபிள்.. ளை
துன்கொடியர் சிங்களத்தின் தீக்கொடுமை தன்னிலவன்
தேசமதை வென்றிடுவான் தேவியளே சொல்லுசொல்..லு

(10)
எட்டப்ப இழியர்

(தமிழ்மகள் உரைத்தல்)
(சிந்து-முந்நாற்சீரிரட்டை)

புலவா நீசொல்லும் உண்மை-எனினும்
பொய்யரின் வாட்புயம் பெய்யுதே வண்மை
எழிலாமெம் மாதர்கள் திண்மை-அந்த
எழியன் எரிக்கத் தீயாகும் பெண்மை!

கருணா வென்றொரு காலன்-அரச
கட்டிலில் தங்கிடும் தமிழர் தீயன்
உருமா றியவோர் பேயன்-இந்த
யுகமும் எழுது மெட்டப்ப தீயன்

டக்ளசு வென்றொரு கெட்டான்-சிங்க
ராட்டினம் தன்னிலே ராட்சதன் தொட்டான்
மக்களைக் கொன்றிட வைத்தான்-தமிழர்
வதைப்பில் யாழ்குடா மெங்கணும் விட்டான்

இளைஞர் மாதர்க டத்தி-லங்க
இராணு வத்தோடு படைகபு குத்தி
வளர்நி லத்திலே பற்றி-எங்கும்
வாதைக ளிட்டுமே வந்தனர் சுற்றி!

எண்ணிநீ பாரடா நெஞ்சில்-இந்த
இழியர் வாழவோ எங்கநெ ருப்பில்
உண்ணவு ணவிலாக் கஞ்சர்-எதிரி
உணவுக் காய்த்தமிழ் கொன்றிடும் வஞ்சர்

பிஞ்சுநற் குழந்தைகள் கொன்றார்-வெறிப்
பேயராய் அல்லையில் பிய்த்துமே நின்றார்
பஞ்சும லர்ப்படு கன்றை-மன்னார்
பசுநி லத்திலே தூக்கிலே யிட்டார்!

எங்களின் பயங்கர வாதி-தமிழ்
எட்டப்பர் என்றிவன் எழுதும் சாதி
வெங்களத் தேசப்போர் வீதி-இந்த
விதியில் மீண்டுமா வந்திடும் கூதி!

சித்தார்த்த னென்றொரு ஆட்டம்-ஆலாலு
சேர்தந்தை தர்மரைக் கொன்றவன் கூட்டம்
முத்தார்ந்த சிவராம் ஏட்டை-இந்த
முகமா றிக்குழு முடித்தனர் பாட்டை!

(11)
தமிழன் வாழ்வு கலங்கரை விளக்கம்!

(பதிலுரைக்கும் புலவன்: அறுசீர் விருத்தம்)

பொதிகையார் தமிழின் வெற்பு
பூத்ததோர் பெண்ணின் கற்பு
அதிகையார் அணங்கே பெற்ற
அழகுமா வெழிலின் தேவி
நதிகையூர் மண்ணும் தாயார்
நல்கிய வாழ்வும் வளமும்
விதியதாய் எதிரி வந்த
விதியது கொடிது தேவி!

தேசிய இனமே என்னும்
தீந்தமிழ் மக்கள் மீது
வீசிடும் குண்டு கண்டோம்
விசரர்கள் கையில் வந்த
ஊசிபோல் இரத்தம் கீறி
உயிர்வதை காவு கொள்ளும்
தாசிபோல் ஆட்சி யாளர்
தருக்கர்கள் என்னே என்பேன்!

உணவெனும் தடையே இட்டார்
உலகத்தார் கேள்வி கேட்க
கணமெனும் மனமே காட்டார்
கதவெலாம் மூடி நின்றார்
பிணமெனப் போக வைத்தார்
பிசாசென நின்றார் தன்னின்
குணமொhடு வாழ்வு உண்டோ
கொள்ளடி தமிழென் சக்தி!

தருவது போலே சொல்வார்
தந்துபின் வழியில் வைத்து
உருவியே எடுப்பார் ஈற்றில்
உண்மையைப் புலிகள் என்று
சுருதியை மாற்றம் செய்து
சொற்கதிர் தன்னில் வைப்பார்
குருதியை வார்க்கும் போரைக்
கொடுப்பர்கள் இவர்தான் அன்றோ?

தீர்வுதீர் வென்று பேசி
தீர்ந்தது அரைநூற் றாண்டு
பார்வையை தமிழன் வைத்துப்
பட்டது துளிர்ப்பு அன்புச்
சேர்வைகள் முடிந்து தீயின்
தீக்கணம் பரவ லாச்சு
ஓர்வயம் இல்லாப் போதில்
உலகமே தோற்றுப் போச்சு!


கொடியரில் மகிந்தர் கூட்டம்
கொடியதாய் ஆட்சி வந்தார்
கடியரில் இதுதான் பொல்லா
கடியநாய் என்று வந்தார்
தடியராய் எருமைத் தோலாய்
தருக்கராய் வந்தார் எஃகுப்
பிடியராய் வந்தார் போரும்
எழுந்துமே எரியக் கண்டோம்!

வர்த்தக நலனைப் பார்த்தே
வல்லர செல்லாம் வந்தார்
சொர்க்கமாம் பூமி தன்னைச்
சொந்தமாய் தமிழர் கொண்டும்
நிர்க்கதி யில்லா வாழ்வை
நெஞ்சிலே கொள்ளார் அந்தத்
துர்க்கதி யொன்றில் எங்கள்
தூணெனப் புலிகள் வந்தார்!

ஆட்சியின் இராணு வத்தார்
அஞ்சியே ஓடும் கோட்டில்
நீட்சியாய் போரைக் காண
நிற்குதே உலக மன்றம்
மீட்சியாய் தமிழன் வந்து
மீண்டொரு நாடு கண்டால்
காட்டிடும் தமிழன் வாழ்வு
கலங்கரை விளக்கம் தானே!

(12)
பாற்கடற் பூமகள்

(புலவன் இன்றும் கூறுகிறான்)
(கண்ணிகள்)

என்னுரை கேட்டுமே ஏந்திழை சென்றனள்
இன்னுயிர் மின்னுகின் றாளே
பொன்மகள் தன்வயம் பூத்திடும் கார்விழி
போனவள் தேடுகின் றேனே
இன்னுமோர் நாளையில் எந்தனைத் தேடியிவ்
ஈரடி செய்குவள் தானே
என்றிவன் விஞ்சிடும் ஈர்ப்புகள் நோக்கிட
இங்குநான் வந்திருப் பேனே!!

ஆரண வல்லியின் ஆடலின் நர்த்தனம்
ஆர்கடல் மீதுநின் றாடும்
பூரணை அம்புலி பொங்கிடும் பாற்கதிர்
பூசிடப் பொன்பரப் பாகும்
வாரணத் தீஞ்சுடர் வண்ணமென் காட்சிகள்
வந்திடத் போதுகள் ளாகும்
தோரணம் மேவிய தோடுகள் காவிடும்
தேவியைத் தேடலென் றோடும்!

பாசமாய் வந்திடும் பாற்கடற் பூமகள்
பார்த்;துமே நாளெலாம் போச்சு
நேசமாய் ஒட்டிய நித்திய மான்விழி
நின்றவள் சென்றதெங் காச்சு
தாசனாய் நங்கையின் தண்முகம் ஒற்றிடத்
தண்தமிழ் கொண்டுவந் தாச்சு
பேசிடப் போகையில் ஓடிடும் மாதினைச்
சேர்த்திடப் பாட்டிசை யாச்சு!

தாமரை வல்லியை தங்கவா ரொட்டியை
தாவிடத் தூதுவைப் பேனே
சாமரைக் தென்றலில் சாய்மடி கொள்ளவே
சத்தியப் போதுவைப் பேனே
பூமலர் சூட்டிய தேரினில் ஊர்உலா
போகிடத் தேதிவைப் பேனே
கோமள வல்லியைத் தேடிடும் பாவலன்
கூட்டிலே மேடையிட் டேனே!

(13)
தமிழன்னம்

(புலவன் கூற்று)
(அறுசீர் விருத்தம்)

அடியொற்றி அடியே வைத்து
அன்னம்போல் வந்தாள் தேவி
இடிமின்னல் நெஞ்சில் கொள்ள
இதயத்தே அலைகள் துள்ள
வடிவுத்தாய் வண்ணப் பூவை
வரவேற்றேன் வாஞ்சை யோடு
அடிபெண்ணே எங்கே சென்றாய்
அழவைத்தாய் அழகு மாதே!

ஒருநாளைக் கிருநாள் எங்கே
ஒழித்தனை மஞ்சு முற்றம்
துருவித்தான் பார்த்தேன் நீர்க்கால்
தூரலைத் தேடிப் பார்த்தேன்
செருவைக்கும் ஈழ மன்றம்
சென்றனை யாமோ என்றே
இருவிழி பூத்தேன் சிந்தும்
இன்னிசை அமுத வாணி!

தாய்மொழி தன்னை எண்ணி
தங்கமா நிலத்தை எண்ணி
பேயிடும் ஆட்சி வாதை
பெருங்கொலை அரக்கம் எண்ணி
ஆயுதம் தமிழன் கொண்டான்
அருங்கொடை உயிரை வைத்தான்
சாயுதல் கொள்ளா வீரச்
சரித்திரம் எழுத லானேன்!

மாதவள் தமிழே வேங்கை
மனத்தொடும் தமிழே எண்ணும்
போதவிழ் தமிழே ஊற்றாய்
பொங்கிடும் தமிழே எந்தன்
காதலி தமிழே மண்ணில்
களமிடும் தமிழே வாட்டும்
வேதனை அறியா யோவென்
விழிகள்நீ வாரா விட்டால்!

(14)
எட்டப்பர்-துட்டப்பர்

(தமிழ்மகள் சொல்கிறாள்)
(காவடிச் சிந்து)

வீரர் பெருஞ்சுனை வீதியில் வேங்கைதன்
ஆரம் எடுத்துநின்றார்-அவர்
தீரம் படைக்கவந்தார்-ஆயின்
சோரம் போனதோர் தீயரும் வந்துமே
தேசம் எரித்துநின்றார்-கருணா
மோசம் படைக்கவந்தான்!

வெங்களப் பூஞ்சிற கன்னமாய் மாதரின்
கங்கணம் வீற்றிருக்கும்--அந்தச்
சிங்களப் படைதெறிக்கும்-வெற்றிச்
சங்கிடும் நேரத்தில் சாற்றிடும் எட்டப்பர்
சந்ததி பழிகொடுக்கும்-எங்கள்
செந்தமிழ் உயிர்குடிக்கும்!

நீரில் நடப்பர்கள் நெருப்பில் குளிப்பர்கள்
நிசத்தில் புலிகளடா-தமிழர்
புசத்தின் வலிமையடா-ஆயின்
சோரம் போனதாய் தின்னும் தமிழனும்
சேர்ந்தனன் சிங்களத்தே-கை
கோர்த்தனன் உண்பதற்கே!

எட்டப்பர் என்கவும் துட்டப்பர் என்கவும்
கொட்டம் அவனெடுத்தான்-தமிழரைச்
சுட்டுப் பொசுக்கிவிட்டான்-இந்த
கெட்ட பிறப்பினன் வட்டப் பரம்பரை
வரலாற்றில் வந்துவிட்டான்-மீண்டும்
உருவேற்றிக் கொண்டுவிட்டான்!

மகிந்தன் பதவியில் மகிழ்ந்தவோ ராண்டினில்
மடிந்தவர் நாலாயிரம்-இரத்தம்
இறைத்தவர் பலவாயிரம்-கலை
வகுப்பாரும் இலக்கிய தொகுப்பாரும் அரசியல்
வல்லாளர் முடித்துவிட்டார்-உயிர்ச்
சொல்லாளர் குடித்துவிட்டார்

டக்ளஸ் கருணாசித் தார்த்தன் என்கவே
மக்கள் எதிரிகளாய்-தமிழர்
எச்சில் விசிறிகளாய்-சிங்க
துக்ளக் அரசினில் துள்ளும் பிடாரிகள்
தோன்றினர் இந்தயுகம்-அட
வீழ்த்தினர் எங்கவினம்!

எந்தனின் குமுறல்;கள் இந்தவரக் கரால்
இருப்பது நீயறிவாய்-எங்கள்
நெருப்பரை நீயறிவாய்-அட
சிந்து களத்தினில் செந்தமிழ் மாந்தர்கள்
வெந்து குளித்தனரே-இன்னும்
நொந்து விழுந்தனரே!


(15)
அரசின் அடிவருடிகள்

புலவன் கூற்றில் நடிப்புச்சுதேசிகள்

(வியனிசைச் சிந்து-நாலிருசீரட்டை)

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி-பாரதி
அஞ்சிய பொய்யரடி!

அந்நியச் சோற்றினிலே அடிமைச் சுகத்திலே
வந்தவன் எழியனடி-எங்கள்
சொந்தமண் எதிரியடி!

காட்டிக் கொடுப்பவன் காலப் பதிவிடும்
கூட்டிக் கொடுத்தவனே-தன்தாயை
போட்டு எரித்தவனே!

தமிழின வாணிபரை தாக்கிப் பணயமிட்டு
எழியவர் பணம்பறித்தார்-கொழும்பு
வழியிலும் பிணம்கொடுத்தார்!

புனர்வாழ்வுக் கழகத்தார் போகும்வழி மறித்து
கனியுயிர் எடுத்தனரே-தொண்டு
இனியரை முடித்தனரே!

அரச படைகளுக்கு அருந்தமிழ் இளைஞர்களை
உரசி இழுத்தனரே-இந்த
பரதேசிக் குழுவினரே!

இராணுவத் தோடுவந்து இன்தமிழ் பாலகராம்
குருத்துகளைக் கொன்றார்-அவரை
உருக்குலைத்துக் கொன்றார்

ஊடகத்து யுகமாந்தர் உண்மைக் குரல்நெறி
தேடி அழித்தனரே-தமிழர்
வாடி அழுதனரே!


தன்னினம் தன்னையே தாக்கிடும் இவர்கதை
இன்னும் தொடர்ந்திடுமா-அடியே
எங்கள் படைவிடுமா?

ஒன்று திரண்டதே எங்கள் தமிழினம்
வென்றுயுகம் படைக்கும்-எட்டப்பர்
நின்றகுகை உடைக்கும்!

(16)
புலிகள் போர்நெறி போற்றிடடா


(தமிழ்மகள் உரைப்பு: வியனிசைச் சிந்து-இருமுச்சீரட்டை)


முத்தெனக் பாவெடுத்து-தமிழ்
முடிபுனைந் தார்க்க முகிழ்த்தவரே
சித்தமும் நானறிவேன்-அந்தத்
தேன்தமிழ் தன்னில்நான் மூழ்கிடுவேன்
நித்தமெம் மண்மடியில்-கொடை
நின்றுயி ராக்கிடும் போதினிலே
எத்தனை கீர்த்தியடா-சிதை
எடுத்தவன் போர்வரி போற்றிடடா!

நத்தெனப் போலெழியர்-அரசை
நக்கிடும் தண்டர் நெறியிலிகள்
மெத்தவும் எழுதிடடா-இந்த
மூடர்கள் தீங்கை வரைந்திடடா
இந்தவோர் மண்வசமும்-இந்த
எட்டப்ப சாதியோ என்றிடடா
வெந்தக ளத்தினிலே-புலிகள்
வீழ்த்துவர் எட்டப்பர் என்றிடடா!

நிமலராஜ னென்றும்-அந்த
நிகரிலா ஆய்வன் சிவராமும்
இமயம்போல் நின்றான்-குமார்
இணையிலா ஆங்கிலப் பேச்சானும்
சுமையைத் தாங்கியவன்-தமிழ்
தீரனாம் விக்கிNனிஸ் வரனென்றும்
எமக்கென நேசமிட்ட –ஜோசப்
ஏந்தல் பரராஜ சிங்கமென்றும்

எத்தனை மானுடங்கள்-தமிழ்
எட்டப்பரா லின்னுயிர் விட்டனரோ?
சித்தம் தனையிழந்து-எங்கள்
செந்தமிழ் இல்லம் துடித்திடவோ?
புத்தம் தலைக்கேறி-அந்தப்
பொல்லா வரங்கர்கள் கொன்றிடவோ?
யுத்தம் தனையிட்டு-ஆட்சி
இத்தர்கள் நெருப்பு உமிழ்வதுவோ?

பார்த்திருக் காதேயடா-அந்தப்
பாரதி போற்கவி ஆக்கிடடா!
கீர்த்திகொண் டார்ப்புலியான்-வெற்றிக்
கொடியிடும் மண்கதை ஆர்த்திடடா!
நேர்த்தி உயிர்க்கொடை-கொண்ட
நிலத்தியல் மாண்புகழ் சேர்த்திடடா
கோர்த்த பகைவரொடு-ஆட்சிக்
கொடியவர் ஓடினர் எழுதிடடா!

நாளை யுகம்படைக்கும்-வேங்கை
நாடுகண் டண்டமே ஆர்ப்பரிக்கும்
காளையும் கன்னியரும்-ஈழம்
காணும் தலைவனின் பேருரைக்கும்
தோளின் வலிபிறக்கும்-தேசத்
துருத்தியில் தேடல்கள் துளிர்த்துவரும்
தூளி தமிழெடுக்கும்-புதிய
தோன்றல்கள் செந்தமிழ் தேசமிடும்!

ஈர விழியரும்பில்-தமிழ்
ஏந்திளை எண்ணக் குவியரும்பில்
பாரம் எடுத்துவைத்தாள்-ஈழப்
பட்டறை மாந்தரின் பாடமிட்டாள்
ஆரம் படைத்தமகள்-அவள்
ஆதங்க முள்ளக் கிடக்கையொடு
வீரம் கதைத்தமகள்-என்னை
விட்டு மறைந்தனள் வானமகள்!

(17)
இன்னும் அவளை ஏனோ காணேன்?

(புலவன் ஏங்கல்: நேரிசை வெண்பா)

அந்திவான் பொங்கும் அழகுப் பெருவழி
சிந்தையில் ஓடத் துருவினேன்-எந்தையாள்
வந்தாளே இல்லை வருவழி வெட்டாது
நொந்ததே யென்பார்வை நோக்கி!

கார்போலும் கூந்தல் கனித்தேன் மலர்சூடும்
வார்போடும் கச்சை மணிக்குரும்பை-மார்போடும்
கையிலே ஏட்டுக் கனமிருக்கும் காரிகையாள்
தையல் வரக்காணேன் தான்!

கண்டாங்கிச் சேலையொடு கட்டும் மடிவிசிறி
திண்டாடும் நுண்ணிடையில் தேசாகும்-பண்ணாக்கி
காற்சிலம்பு தாலாட்டும் கஞ்சமகள் என்பார்வை
பாற்சிலம்ப வில்லையவள் பார்!

எண்ணக் குவியழகில் ஏட்டுப் பதமெடுத்து
உண்ணக் கனிந்தளித்து ஊட்டுமவள்-மண்ணோடு
என்னைக் கவியெழுத ஏடுதந்த பொன்மகளாள்
இன்னும் வரக்காணேன் ஏன்?

விழிப்புருவ மாடும் விழும்மொழிகள் பாடும்
சுழிக்கன்னம் மாதுளையின் தேனாம்-எழிலாகி
தோன்றுவாள் தோன்றித் திருவமுதப் பொற்பாவை
தேன்தமிழிற் பாதருவாள் தேவி!

நிலவுப் பரல்விரியும் நித்திலத்தில் மஞ்சு
குலவி வரும்பாதம் கொண்டாள்-கலம்போல
விண்ணகர்ந்து தேவதை விரையும் அழகோடு
மண்ணகமும் காண்பேன் மதி!

பார்வை கிழித்துவரப் பட்டு வசமிழந்தேன்
தேர்மீ திறங்கினாள் தேவியவள்-ஊரார்
படுவான் கரைநோக்கிப் பாரவலம் பார்த்தேன்
கொடுமை கொடுமையென்றாள் கோதை!


(18)
புட்போலே பறக்கும் அகதிகள்


(தமிழ்மகள் சொல்கிறாள்: வெண்டளையால் வந்த கொச்சகக் கலிப்பா)

கேளடாகே ளெங்கள் கேட்டைநீ பாவலனே
பாளக் கொடுங்கோலர் பார்த்தழிக்கும் கிழக்கினிலே
நீளக் கடல்போல் நெடுந்தூரம் மக்களலை
மூள வெறிகணைகள் மூட்டியதோர் ஆட்சியிலே
ஆள மனிதமில்லை ஆகாயம் குண்டுகளை
தாள விசுக்குகிறார் தாத்தா பாட்டியென்று
மாளப் பதறுகிறார் மட்டுநகர் எங்ஙணுமே
மூளும் அவலம் மிகக்கொடுமை காண்கிலையோ?

லட்சோப லட்சம் லயித்தவாழ் மக்களெலாம்
புட்பறத்தல் போலே பிரிந்துமே செல்கின்றார்
முட்கிடந்த வீதியிலே மொய்த்து விழுகின்றார்
சொட்டும் உணவின்றி தூங்க இடமின்றி
கொட்டும் மழையினிலே கூதல்மிகக் காணுகிறார்
எட்டுத் திசையிலுமே எம்மோலம் கேட்குதடா
பட்டு மணித்தரள வார்கடல்கள் மண்ணெங்கும்
சுட்டுப் பொசுக்குகிறார் சொல்லாய்நீ பாவலரே

கோவில்கள் ஆட்சிக் குகையாக மாறியதே
கேவியழும் மானிடங்கள் கேட்கநீ மாட்டாயே
தாவிமுலை கேட்டு தாயையே பார்த்தழுவார்
பாவிகளாய் பிள்ளை பசித்தழுது ஏங்குதடா
காவுபடை ஏவுகணை கார்வானம் வந்திடும்பார்
தாவிவரும் குண்டால் தமிழீழம் வெந்துவிடும்
சாவை அரவணைத்து சஞ்சரிக்கும் மக்கநிதம்
கூவியழ வைத்தாரே கொள்ளாய்நீ பாவலரே!

இனவழிப்பு ஒன்றேதான் இன்றெமக்குத் தீர்வென்றார்
மனப்;பொறியில் உண்மை மனிதமிலா வல்லரக்கர்
கனத்தபொதி கந்தகத்தில் கட்டி எறிகின்றார்
தினைத்தள வேனுமவர் தேசநலம் பாராதார்
கனைத்தபடி பேசுகின்ற களப்போரின் நர்த்தகர்கள்
அனைத்தும் பொய்யாய் அளந்து அகிலமதில்
முனைந்துபோர் காட்டி முடிச்சினிலே காசள்வார்
கனன்ரெரியும் நிலமினிமேல் காட்டும் விடியல்பார்!

எங்கள் நிலங்கள் இனியெரிய மாட்டாதே
பொங்கும் புலிகள் பொறுத்தது போதுமென்றார்
வங்கம்போல் ஆர்க்கும் வடிவம் பிறந்ததென்றார்
கங்குல் பகலெங்கண் கட்டழகுப் பூமியிலே
எங்கும் புலிமறவர் ஈர்த்துஎழ நாள்கண்டார்
தங்கத்து நாடுகள்முன் தந்தவொப் பந்தத்தால்
சிங்களத்துக் கூற்றை தெரியவே காட்டிவிட்டார்
துங்கதமிழ் ஈழச் சுதந்திரத்தின் நாட்குறிப்பாய்!

(19)
சொல்லடி சுதந்திரதேவி!

(புலவன் கேள்வி: எழுசீர்; விருத்தம் -ஈற்றடிமடக்கை)

சொல்வது சரிதான் சுந்தரி உந்தன்
சித்தமும் உள்ளமும் சிறப்பே
வெல்வது ஒருநா ளென்றுமே நின்றால்
வீழுமா மாந்தரைப் பாராய்
கொல்வதே ஒன்றே கொண்டவன் கருணா
கூட்டமே வந்ததே கூற்றாய்
இல்லையில் லைபார் இன்னுமோர் காப்பு
எங்களுக் குள்ளதோ சொல்வாய்
மெல்;லிய லாளே மேதினித் தமிழே
ஒல்லுவை என்னருள் உமையே!

ஆரணங் கெங்கள் அஞ்சுகப் பெண்கள்
அருளிடும் கற்பினைப் பறிப்பார்
வாரண மார்பன் வள்ளலாய் நிற்பான்
வாழ்விடும் நாயகன் கொல்வார்
பூரண அரச பொறியிலே வந்து
பெற்றவர் தன்னையும் கொல்வார்
சூரனாய் அரக்கம் செய்திடும் வதைகள்
சிங்களம் போடுதே சிட்டே
பேரழ கான பெண்மயில் வார்ப்பே
பெட்பெனும் என்னவள் உமையே!

ஆயிரம் குண்டுகள் அடுக்கியே கொட்டும்
அரசிடும் தீயிலே அழிந்தோம்
வாயிலும் வயிறும்; வாழ்ந்திடும் மங்கை
வன்முறைப் பெயர்விலே சிதைந்தாள்
நோயிலும் இல்லம் நோற்கிலா வாறு
நெருப்பிடும் குண்டிலே நீத்தார்
தாயொரு பக்கம் தந்தையும் பிள்ளை
தனித்தொரு பக்கமாய் பிரிந்தார்
காயழல் அன்னை காட்டடி வெற்றிக்
கனலிடும் சுதந்திர தேவி!

மகிந்தனென் றொருவன் மண்டையில் லாதான்
மணிக்கொரு கொடுமைக வார்த்தான்
சகத்தொடு குடும்பம் சகிதமாய் ஆட்சிச்
சாக்கடை ஆக்கியே வைத்தான்
முகத்தொடு பண்டா முடுக்கிய சால்வை
மேவிய வாதியாய் வந்தான்
பகைத்திடல் இவனே படைத்தனன் தமிழர்
பச்சையி ரத்தமாய் பறித்தான்
செகத்தெழில் நங்காய் சிந்துரக் குயிலே
சொல்லடி எங்களின் வெற்றி!

உந்தனுக் கிங்கே உரைத்திடும் இப்போ
எம்படு வான்கரை பாராய்
நொந்திடும் தமிழர் வீடுகள் கூட்டம்
நெருப்பிலே எரியுதே நீறாய்
அந்திவான் பார்த்து ஆரநீர் மீன்கள்
அளித்ததோர் மாந்தரின் வாழ்வு
குந்திடக் கூட கொள்ளிடம் இன்றி
கூடெலாம் கலைந்தது கேளாய்
சந்தவா ருதியே சுந்தரித் தமிழே
சாவதோ சொல்லடி உமையே!

என்னுளம் கொதிக்க மின்னெழில் சொன்னாள்
||இன்னுயிர்க் கவிஞனே கேட்பாய்
மன்னுளம் துள்ளி மத்தளம் கொட்ட
வரிசங்கம் தானென வருமே
தன்மணில் தாங்கும் தானைகள் போரில்
தருவதே சுதந்திர தேசம்
அன்றிலா தொன்றும் ஆகிடா தறிக
அகிலமிவ் வாறிடும் உண்மை||
என்றநல் மாதாள் எடுத்தடி சென்றாள்
என்னவள் போமெழில் கண்டேன்!

(20)
தேடலும் தேவியும்..!
(புலவன் சொல்லல்: எழுசீர் சந்த விருத்தம்)


சென்றனள் சென்றவள் தேமொழிச் சிந்தவள்
தேடினேன் தேடினேன் காணேன்
அன்றிலைப் போலவள் அருகினில் இருந்திடில்
அருங்கவிக் கீடினை உண்டோ?
என்தமிழ் அணங்கவள் எம்நில ஊற்றவள்
ஏந்திளை யெங்கவள் சென்றாள்?
மன்பதை நோக்கிய மட்டிலாத் துன்பமோ
மானவள் கண்டிடச் சென்றாள்

இப்படி இருக்கையில் என்விழி துடிக்கையில்
இரண்டுநாள் கழிந்தது இடியாய்
தெப்பமாய் விழிமடல் திசையிட நிற்பினும்
தீந்தமிழ் மாதினைக் காணேன்
எப்படிப் பாவல இன்றுநீ பார்த்தியா
எங்களின் வான்படை.. என்றாள்
செப்புதல் பின்புறம் தேன்செவி ஆர்த்திடத்
தேவியள் வந்தனள் கண்டேன்

போர்ப்படை ஆர்த்திடும் புலிப்படை வான்மிசை
பிறந்தது இந்தநாள் புலவா
நேற்றொரு இரவினில் சிங்களத் தலைநகர்
நீர்கொழும் பானவான் தளத்தை
வீற்றொடு பறந்தவிண் விடுதலைப் புலிகளின்
விமானமே குண்டுகள் போட்டே
நாற்புவி அனைத்தும் நாடிடும் போரியல்
நயந்தது என்தமிழ் நாடே!

என்னது என்றவள் எழில்முகம் ஈர்த்திட
எழுந்துமே சென்றிட நின்றேன்
பொன்மகள் பிடிபட போகையில் பேதையென்
பிடிபடா வாறுரை பகர்ந்தாள்
தென்தமிழ் ஏட்டிலே தேசியத் தலைவனின்
தீரமாய் வேங்கையர் திகழ்ந்தார்
மன்புகல் நாடுகள் வாழ்ந்திடும் தமிழரே
மனிதினில் தொட்டது மகிழ்வே


மென்மகள் பொற்கலம் மேவிசை யாக்கிட
விரைகழல் நோக்கியே நடந்தேன்
பொன்மகள் ஏற்றிய புத்தொளி பார்த்துநான்
பெரும்கொடை எண்ணியே கிடந்தேன்
||நன்றிடப் பட்டதோர் நாயகம் பிரபவெம்
நாயகம் என்றவள் நடந்தாள்
என்தமிழ் மாந்தரின் எழுச்சியாய் வான்படை
இட்டதோர் சரிதமே கண்டார்

(21)
புரட்சியின் சரித்திரம்
(புலவன் உரைத்தல்: கண்ணிகள்)
புரட்சிப் பெருங்கோடு
பூத்த நிலக்கதைகள்
அரங்கப் புவிமுழுதும்
ஆர்த்துப் பறந்ததடி
சுரங்கப் புதுப்பொன்னாய்
தேர்ந்த புலித்தானை
தரையிற் படைகண்டார்
தானை கடல்கண்டார்
நிரைசார் கரும்புலிகள்
நீறா(க்)கக் காத்திருக்கும்
இருப்பாய் நிறைந்தார்கள்
எங்கள் நிலப்போரின்
செருக்களத்தே வான்கலங்கள்
சேரச் சிறந்தகதை
வரப்பில் உயர்ந்ததடி
வண்ணத் தமிழ்பாவாய்!


ஆகாயக் குண்டுகளால்
ஆறாகும் வல்லிரத்தம்
கூகை அரசாட்சி
கொட்டிவரும் பேய்வதையை
வாகை கொள்வதற்கே
வந்தார்கள் வான்புலியார்
ஈகைப் கொடைமறவர்
இன்றோர் பரிமாணம்
தாகத் தமிழீழம்
தாங்கிக் கலசமிட்டார்
சோகம் பறந்ததடி
சோர்வு நிமிர்ந்ததடி
வேகப் படைவலுவை
வேங்கை பதிந்தகதை
யாகம் புதிதான
யாப்பாம் தமிழ்ப்பாவாய்!

அருவிக் குளிர்மொழியே
ஆசைத் திரவியமே
செருவில் புலியசைக்கும்
செங்களத்து மானவளே
கருவில் தமிழ்நிலத்தை
களத்தில் உருவாக்கி
பொருதும் புலிப்படையை
புத்தகமாய் வைத்தவளே
மருவி வரப்பசையும்
மானுனையே தேடுகிறேன்
புருவம் விழிப்பரப்பில்
பூக்கும் கவிமகளே
உருகும் புலவனொடு
உலாவரவே வந்துவிடு
பிரபாத் தலைவனையே
பெற்றாய் தமிழ்ப்பாவாய்!

கந்தகக் குண்டுகளை
கார்வான் எடுத்துவந்து
வெந்ததீ கொட்டினார்கள்
வேகப் பறப்பிலிட்ட
எந்திர வானினூர்தி
இன்றொரு கூற்றினூர்தி
தந்திரம் பேசிவையத்
தளமெலாம் பொய்யராகி
மந்திரக் கோடனாக
மகிந்தர்கள் பேசினார்கள்
சுந்தர மண்ணிலாடும்
சிங்களப் பேயினாட்சி
வெந்தது ஓடியென்க
விமானம் பெற்றுவிட்டோம்!
வந்தது புலிகழீழ
வடிவே தமிழ்ப்பாவாய்

தரைப்படைகள் தாங்குநிலம்
தாவுகின்ற வாரலையில்
நிரைப்படகு போர்க்கருவி
நிறைத்த கரும்புலிகள்
வரைகள் உயரம்போல்
வான்கருவி ஏவுகணைக்
கருவிகளின் தோள்நீட்டம்
களத்தில் விமானமொடு
மரபுவழி கொண்டதடி
மானமண் போர்வேங்கை
உரமெடுத்த செந்தமிழர்
உலகத் தனித்துவத்தின்
அரனெடுத்துப் பாடுகிறார்
அகிலப் புலமெங்கும்
செருவில் நிறைந்தகளம்
செப்புதடி தமிழ்ப்பாவாய்!

சின்மயத் தேவியன்பே
சிந்தாகு லப்புலவன்
சொன்னயத் தேடலெண்ணி
சிந்திய தூரநெஞ்சில்
உன்வயம் தருவையென்றே
உறக்கமில் லாதிருந்தேன்
தென்புலம் சிங்களத்துத்
தீயவர் மகிந்தராடும்
வன்புலப் படைகளாக்கும்
வதையிட வெந்துபோனேன்
என்பொடு உருகலானேன்
இனப்பொறி யாடலெண்ணி
உன்முகம் நோக்கியானும்
உயிர்கொண்டேன் சென்றதெங்கே?
அன்பொடு உரைக்குமாதே
அழகேவா தமிழ்பாவாய்!

(22)
வான்படை கண்டு வந்தாள்!

(நொண்டிச்சிந்து)
உச்சியில் ஒளியொன்று கண்டேன்-தமிழ்
ஏந்திளை விண்கலம் என்பது துணர்ந்தேன்
கச்சிடும் மென்மகள் வந்தாள்-அவள்
களிமுகம் புன்னகை காட்டியே நின்றாள்
||எச்சமர் சென்றாய்நீ இயம்பாய்-அடி
இத்தனை நாளேனோ எனக்கது சொல்வாய்
பிச்சுப்பூ வலரிப்பொன் மாதே-லங்காப்
போய்கண்டு வாடினேன் பேசுஇப் போதே||!!

இடியென வீழ்ந்திடும் குண்டு-லங்கா
எறிந்திடும் போதிலே எரிநிலம் கண்டு
மடிநிலத் துயர்நிலை விண்டு-புலிகள்
வான்படை வந்ததே வரலாறு இன்று
விடியலுக் கானதோ ரியக்கம்-அட
விண்படை கண்டதிது வன்றோ வியக்கம்
நெடிய மலைவரை மீதும்-கவிஞ
நெருப்பு விமானப் பொறியினி வீசும்!

தமிழர்க ளெங்கணும் குதித்தார்-புலிகள்
தளத்திலே வான்படைத் தங்கம் பதித்தார்
அமிழ்தாம் விடியலின் வலிகள்-விமானம்
ஆக்கிப் பறந்தனர் ஆகாயப் புலிகள்
கமழும் மரபொடு களத்தே-போர்
கண்டது வேங்கையெம் நிலத்தே
சுமையைத் தாங்கிடும் தேசம்-இனிச்
சுதந்திர நாள்வந்து சேர்ந்திடப் பாடும்...||

||புலத்துத் தமிழரெல் லாமும்-தமிழ்
பேசும் உலகொடு பேணிடும் நாடும்
கலத்துப் படையணி விண்ணில்-புலிகள்
களத்தை நினைத்துக் களித்தனர் கண்ணில்
மலைத்துப் போனவர் மகிந்தா-சிங்க
வன்படை யாக்கிய வாதிகோ விந்தா
நிலத்துப் பகைவர்கள் வீழ்வர்-அந்த
நிசத்தைத் தரிசிப்பாய் நிசமிது என்றாள்!

கேளடி பெண்ணேநீ கேளாய்-எங்கள்
கேட்டை நிரப்பிய தீயவர் சாவார்
நாளும் மடிந்திடும் மக்கள்-ஈழ
நாட்டில் சுதந்திர நாடென மீள்வார்
வாளை உயர்த்திய வீரர்-புலி
வான்படை ஆக்கி வரலா றெழுதினர்
வீள்வோம் என்ப தினியில்லை-தமிழர்
வெற்றிக் கனியென வான்படை வந்ததே!


(23)
திரிபட நிற்கும் இந்தியா!

(தமிழ்மகள் உரைத்தல்: நேரிசை ஆசிரியப்பா)

நல்லது புலவா நரியாய் செயலிடும்
கொல்லும் எழியர் கூடினர் இந்நாள்
ஈனப் புலையர்கள் இழிவாம் படையினர்
மானத் தமிழரை வதைத்திடல் தானொரு
வேதனை அறிவாய் மோடாம் மகிந்தவின்
சாதனை வருடச் சரித்திர மாகவே
நாலா யிரமாய் நசிந்த சடலங்கள்
நாலா வீழமும் நலிந்து சிதறின
இரத்த ஆறு எழுதிய ஆட்சியை
கரத்தில் எடுத்த கசப்போக் கிலிகள்
மரத்த மனத்தின் வக்கிரம் காட்டினர்
தமிழர் நிலங்கள் தறித்தனர் இலட்சக்
குமையும் அகதிகள் குவிந்தனர் படையின்
பல்குழல் எறிகணை பரந்து எரித்தது
பொல்லாக் காக்கை போலவன் கருணா
அந்நியற் காகவே அருநிலம் கொன்றான்
இந்நாள் அவனே எட்டப்பன் ஆவான்
சிறுவரைப் படைக்காய் சேர்த்து இழுத்தான்
வறுமைக் கோட்டில் வாழ்பவர் பிள்ளையை
காசு கொடுத்து களப்பலிக் கெடுத்தான்
நாசம் அவனால் நற்றமிழ் பெற்றது
படையும் படையுடன் பக்கம் வந்திடும்
முடையும் குழுக்கள் மூட்டிய வதையால்
இளைஞர் அறிவோர் இறந்தனர் எழுத்தில்
விளையும் தமிழரை விசுக்கிச் சுட்டனர்
ஒருநாள் பத்தென உயிரை எடுத்தனர்
கரிநாள் எனவே காலம் கழியவே
கிராமம் கிராமமாய் கொள்ளை அடித்தனர்
மக்களுக் குதவும் வணிகரைக் கடத்தினர்
பக்குவ மாதரைப் பதைக்கக் கொன்றனர்
திக்குகள் எட்டும் தேசங்கள் முற்றும்
பக்காக் கயவர் படையின் கொடுமை
முற்று முழுதாய் முகங்கள் காட்டின
வெற்றுக் கொடியவர் வீதியில் தெரிந்திட
அரசின் ஆட்சி அசிங்கமாய் உலகின்
சிரசில் உரசின செல்லாய் காசாய்
மகிந்த ஆட்சியை மன்றெலாம் கருதின
மனித உரிமை மன்றங்கள் அனைத்தும்
புனிதர் போப் பாண்டவர் உட்பட
||மகத்துவ மானுடச் சாசன அமைய
செகத்தினில் ஆட்சி செறியவே நடத்துக||
என்றெனச் சொல்லியும் எரியும் நாட்டை
கொன்றொழித் திடுமோர் கொடியவர் மகிந்தர்
இன்னும் வன்செயல் இயற்றியே மகிழ்ந்தார்
உலகை ஏமாற்ற உரைப்பார் தீர்வு
அலகை இராணுவ அடாவடி யாக்குவார்
செயலிப் பொழுது செப்படி வித்தையாய்
அயல்நா டெல்லாம் அகிலம் முழுவதும்
புயலாய் எழுந்தது போகிற போக்கில்
மயக்கம் தெளிய மகிந்தர் விசரனாய்
தெரியவே வந்தார் மிலெனியம் அமைப்பு
புரியவே கொடுத்த பெருநிதி வளத்தை
நிறுத்திய செய்கையால் நிதானம் இழந்து
கிறுக்கிய கடிதம் கொடுத்து அமெரிக்க
நாட்டை வேண்டி நல்கிடும் நிதியை
கேட்டுமே கேட்டு கெஞ்சினார் அறிக
சூடான் போலவே தீயவர் இலங்கா
கேடாய் மலிந்ததை கேட்டிடும் அமைப்புகள்
நிதியை இராணுவ நிட்டுரம் காட்டும்
சதிக்கு உடந்தையாய் சாக்கிட மறுத்தன
இந்தியா தமிழரின் இதய சுத்தியாய்
மந்திரி போலவே மதிக்க மறந்தது
கோடானு கோடி கொடிய ஆயுதம்
தேடித் தேடி திறந்தது லங்கவின்
மகிந்தன் மனம்போல் மகிழ்விட எண்ணி
தகிக்கும் தமிழரைத் தாக்கும் ஆயுதம்
மன்மோகன் சிங்கின் மன்றமாம் இந்திய
துன்போக் காளர்கள் திறையாய் கொடுத்தனர்
தமிழகத் திற்கொரு தங்க முகமாய்
அமிழ்தாம் ஈழமென் றடுக்கிய முகமாய்
இலங்காக் கொடியவர் இயக்கநல் முகமாய்
துலங்கிடும் இந்தியா திரிபட நிற்பதும்
இந்த யுகத்திலே இழிவாம் சரிதமே
வெந்த புண்ணிலே வேலை எறிந்திடும்
இந்திய நாட்டை இனிமேல் நம்பிடாய்
சிந்திடும் சுதந்திரம் சொந்தக் காலிலே
நின்றிடல் ஒன்றே நிசத்தமிழ் ஈழம்
வென்றிடும் என்பது விளங்குக கவிஞ
நன்றென இந்னோர் நாளையில் வருவேன்
அன்றுனை காணும் அரியபொன் நாள்வரை
சென்றுவா என்று செப்பிடு
இன்னொரு பொழுதெனை ஏற்பாய் கவிஞனே!||

(24)
இருப்பாய் தமிழா அரனாய்!

(புலவன் உரை: எழுசீர் விருத்தம்)

தலைக்கொரு கதையாய் வாலொரு கதையாய்
தந்தது இந்திய தருக்கம்
கலைத்திட அகதிக் கஞ்சலாய் ஆக்கி
கனித்தமிழ் மண்ணினைக் கருக்கி
குலைத்திட வைக்கும் கொடியவர் லங்கா
கூட்டிலே வந்தது இந்தி
மலைத்திடல் பாம்பு மறைப்பிலே கொட்டி
வழங்கினர் ஆயுதம் அந்தோ!

பாரதம் என்றும் பண்புகள் என்றும்
பாட்டிட நின்றவன் இவனே
போரது மூள புண்ணிய பூமி
புரிந்திடும் எம்நிலை என்றேன்
கூரது கொண்டு குதறிடும் ஆயுதம்
கொடுத்தபோ தென்னுளம் வெந்தேன்
வீறது கொள்ளும் வேங்கையின் மண்ணே
விசமிடும் இந்திய நாடே!

என்னுளம் உறையும் ஏந்திளை தமிழாள்
இந்திய வேடமே கண்டாள்
பொன்மகள் வேங்கை பெற்றவன் நெஞ்சில்
பொறியினை இன்றுமே கொண்டாள்
அன்றெமை ரஜீவ் அமைதியென் படையை
அனுப்பிய காரணம் அழிப்பே
வென்றிடாச் சிங்களம் வென்றிட வெண்ணி
விசுக்கிடும் தன்மையெம் அழிப்பே!

முலையினை மாதர் மூடியே காத்தார்
முற்றிய இந்திய வெறியால்
குலமகள் பல்லோர் குலமகன் பல்லோர்
கொன்றது இந்தியப் படையே
மலமிடும் குழுக்கள் வயிற்றினை நிரப்பி
வழங்கிய கொடுமையின் அதிர்வே
நிலையிலாத் தீர்வை நிறுத்திய டில்லி
நெருப்பிடும் சிங்களம் வளர்த்தார்!

கூட்டமைப் பினரை குதிப்பொடு அழைத்து
கூட்டமும் பேச்சுமே வைத்தார்
மூட்டிய சிங்க முடிச்சுமா றிகள்
முகத்திடும் உதவியும் வைத்தார்
நீட்டிய தமிழர் நீள்கரம் மறுத்து
நெருப்பிடும் ஆயுதம் கொடுத்தார்
ஊட்டிடும் புத்தி உரையினை வகுப்போர்
இந்தியத் தமிழரை எதிர்த்தார்!

நாராயன் என்னும் நாட்டுறோ தலைவர்
நரியரே தமிழரின் எதிரி
பாரத அரசில் படைப்புல நபர்கள்
பார்ப்பனர் தமிழரின் எதிரி
வேரையே எரிக்கும் விசக்கொலை நாட்டில்
விசுக்கினர் ஆயுதம் என்றால்
யாரையவ் டெல்கி நாயகம் ஆட்சி
நம்பினார் என்பதை நயப்பாய்!

இந்தியப் பாதை எங்களுக் கில்லை
இனியினி என்னவோ ஆகும்
செந்தமிழ் இனங்கள் சிந்தனை மறுக்கும்
சொல்லியல் ஆய்வினர் கேடாம்
முந்திய ரஜீவார் மூட்டிய தீயில்
முடிந்தது எங்களின் வாழ்வு
இந்தவோர் வேளை இதுகதை என்றால்
இந்தியப் போதனை கேடாம்!

என்னுரை இதயம் பொன்மகள் நெஞ்சில்
இப்பொழு தெழுதியே இருக்கும்
ஒன்றுகேள் தமிழா விந்தியா அரசம்
ஊத்தையர் மாறிட மாட்டார்
வென்றிட வேண்டில் வித்துவ வேங்கை
விதம்வித ஆயுதம் செய்வார்
கொன்றிடும் எழியர் கொலைக்களம் வெல்வார்
கூடுநீ ஒற்றுமை அரனாய்!

(25)
ஈழப்பொன்னாட்டு இளவரசி

(புலவன் ஏக்கம்: பன்னிருசீர் விருத்தம்)
இன்னும்நான் வருவேனென்(று)
என்தமிழாள் சென்றவள்தான்
எங்கே சென்றாள்?
இருக்கையினில் கல்லானேன்
இருவிழிகள் நெருப்பானேன்
இன்னும் காணேன்
என்னுரைகள் கணினியவள்
இதயத்துப் பொன்னிதழில்
எடுத்தே யிருப்பாள்
எழில்வையத் துருவமிடும்
இந்திரம்போல் கனடியத்தில்
இருக்கும் இவனை
முன்மொழியும் செந்தமிழாள்
முத்தமிழின் நிலமார்க்கும்
மோகப் புலவன்
வேர்விழியில் நீரூற்றும்
விரைகழலைக் காணாது
விக்கித் திருப்பான்
என்பதனை நன்றுணரும்
ஏந்திளையாள் பூங்கவிஞன்
இதயம் திருத்தும்
ஏவுகணை வான்படையின்
எழில்ஈழப் பொன்னரசி
எப்போ வருவாள்?

பெரும்தலைவன் பிரபாவின்
பெட்புமனம் ஈர்த்தவளின்
பேறே கொண்டேன்
பேசாத நாளெல்லாம்
பிறவாநாள் போலுமவள்
பேச்சுக் கொண்டேன்
அரும்புமனக் கவிசெருகி
ஆசையொடு ஊடலிடும்
அழகுப் பெண்ணாள்
ஆடலிடப் பாடலிட
அணிநடையின் சிலம்பொலியில்
அசைத்தே நிற்கும்
கருமுகிலைத் துளைத்துவரும்
கற்பனையின் மழையூற்றைக்
கனக மாதை
காணாது ஏங்கிமனம்
கற்பாறை மீதிருந்து
ககனத் தேங்கும்
பெரும்பொழுதை கொண்டிருக்கும்
பெய்மழலைக் கவிஞனுடன்
பேசும் பொழுதை
பேறாக்கி வருவாளா
பூங்கூந்தல் அசைந்தாடப்
பூக்கும் வஞ்சி!

ஓடுமுகில் ஓடிவரும்
உலவுதென்றல் பாடிவரும்
உள்ளம் ஏங்க
ஒட்டியாணப் பட்டொளியில்
என்தமிழாள் அன்னநடை
எடுப்பாள் எந்தன்
வாடுமனம் கோடைமலர்
வண்ணமெனப் பூத்துநிற்கும்
வடிவே கொள்வேன்
வாரியெடுத் தாசையொடு
வாஞ்சையிலே மோதுகவி
வடிக்கும் தேசம்
ஆடுமயில் தோகையென
அலங்கரிக்கும் மண்ணினொடு
அசையே ஆவேன்
அழகான தேரசைய
அமுதாகித் தமிழசைய
ஆக்கும் தேவி
நாடுமனம் ஆனவனை
நங்கையவள் பேசவைத்து
நாதம் சொல்லும்
நர்த்தகிவெண் முகிலிறங்கி
நடைபயின்று அருகமர்ந்து
||நலமா|| என்றாள்!


(26)
வந்தாள் மகராசி

(புலவன் கூறுகிறான்: அறுசீர் விருத்தம்)

மைவிழி மானின் துள்ளல்
வசமிடும் வளையின் துள்ளல்
தைமொழி கவிதைத் துள்ளல்
தாவணி மாவின் துள்ளல்
கையெழில் மலரின் துள்ளல்
கனியிதழ் குயிலின் துள்ளல்
வைகறை நகையின் துள்ளல்
வடிவினள் அழகு தந்தாள்!!

மாறாப்புத் தோளி லாடும்
மடிப்பொடு பறக்கும், நெற்றி
வீறாப்புத் திலகம் காட்டும்
விரைநடை அன்னம் வைக்கும்
நூறாய்ப்பூ கூந்தல் ஆக்கும்
நூலிழை ஒட்டி யாணம்
பேறாகி அழகு சேர்க்கும்
பேரெழில் மயக்கம் கண்டேன்!

நீலவான் அந்தி வட்டம்
நிலவொரு பாலின் முற்றம்
கோலவான் சிகப்பு மஞ்சள்
குலவிடும் முகிலின் சுற்றம்
காலநீர் அலைத்து மீளும்
கடலெலாம் கதிரைப் பற்றும்
வாலையாய் ஆங்கே வந்தாள்
மனதிடும் அழகுப் பெண்ணாள் !

போகென்று சொன்னால் போகாள்
புன்சிரிப் போடு நிற்பாள்
பாகென்று சொல்லி விட்டால்
பாவொன்று தருவாள் தென்னைத்
தாகத்து நெஞ்சில் வைத்துத்
தாலாட்டுப் படிப்பாள் இந்த
மோகத்துக் கவிதை மன்னன்
மெல்லியள் தமிழ்தான் அம்மா!

நேரங்கள் போகும் மணலின்
நிலமிசை அவளின் தோற்றம்
ஆரங்கள் நீண்டு நீண்டு
அணிமகள் பதிகம் போற்றும்
பாரங்கள் மறப்பேன் தமிழாள்
பயிலிடும் அழகு காண்பேன்
வீரம்செய் நிலத்தின் தெய்வ
வித்துவம் தமிழே அன்றோ!

(27)
இமைவான் பொற்படை


(தமிழாள் உரை: வஞ்சி விருத்தம்)

நலமா என்னுயிர் நம்நாடு
புலவா புத்துயிர் பெற்றாயா
பலமாம் விண்படை தன்னாலே
புலியே வென்றது பொன்போலே!

அடியே பெற்றவ ரப்படியே
இடியே பெற்றிடப் பட்டவரோ
விடியல் ஒன்றில் விண்படைகள்
வடிவில் வந்தது தண்தமிழே!

எழிலே யென்னுமோர் பொற்பாவே
பழியே செய்தது லங்காவே
அழிவே செய்தவ ரின்னோர்நாள்
இழிவே கொள்ளுவர் என்போமே!

கிலியே கொண்டிட குண்டாலே
பலியே இட்டிட பார்ப்பாரே
எலியே என்றிட நிற்பாரோ
புலியே விண்படை பெற்றாரே!

தமிழா நற்கவி தந்தானே
அமுதாம் மெம்நில மார்ப்போமே
இமைவான் பொற்படை பெற்றோமே
எமையார் தோற்பரே என்போமே!

(28)
என்பொடிய வைத்தபுலி

(புலவன் உரை: சந்தக் கலிவிருத்தம்)

கஞ்சமக ளன்புருக காதலொடு சொன்னாய்
பஞ்சடிக ளஞ்சவரு பட்டுமல ரன்னாய்
வெஞ்சமரி லெம்கதையே வெல்லுமடி யின்னாள்
நஞ்சுரும கிந்தனவ வஞ்சமினிச் சாகும்!

நெஞ்சிடிய வந்தகரு ணன்கொடிய காக்கை
தஞ்சமென சிங்கரசு தாட்பணிய நாயாய்
வஞ்சமிலா தெம்தமிழ வாணிபரை வாட்டி
விஞ்சுபண மீட்டியவ ரின்றுபிரி வுற்றார்

துன்குழும ரின்றொருவ ரின்னொருவ ரென்றார்
வன்பிடியி வந்தபண வாக்குவத முற்றார்
கொன்றுவரு கூட்டமிடை குத்தியவெம் பகையே
இன்றுபெரு செய்தியென ஏடுகதை யுற்றார்

கொல்கயவ ரென்னெழிய கூத்தியென ஆனார்
வெல்லவரு நன்புலியை விற்றெதிரி யானார்
பல்லிளிய அந்நியகை பட்டுணவு தின்றே
சொல்லுபழி கொண்டகதை செப்புவர லாறே!

அன்னநடை பின்னுசடை அன்பினுரு வாளே
இன்தமிழி லின்னுமொரு எட்டபனின் காதை
முன்மொழிய பட்டதெனில் முத்துதமிழ் போரில்
என்பொடிய வைத்தபுலி இப்புவியி னேறே!

(29)
இந்த வரலாற்றின் எட்டப்பர்


(வினா விடை: வெண்செந்துறை)

டக்ளஸ் சித்தன் டாம்பீகச் சங்கரி
துக்கர் புக்கதை சொல்லுநீ தோழா

இராணுவக் குடையொடு இடக்ளஸ் வீரம்சேர்
புராணத்தில் யாழ்குடா புரண்டது தோழி

சங்கரி மக்களால் துரத்தப் பட்டவர்
இங்கிதம் இல்லார் எழுதடா தோழா!

தர்மசித் தார்த்தன் தந்தையைக் கொன்றபேர்
வர்மக் குழுகண்டும் வந்தவன் தோழி!

அந்நியர் கையிலே அடைக்கல மாகியே
வந்தவர் இன்னும் வதைத்தனர் தோழா!

யோசப்பைக் கொன்றனர் நிமலன் நடேசன்
பாசச் சிவராமைப் பறித்தனர் தோழி

விக்கியைத் திருமலை வேந்தனைச் சுட்டுக்
கக்கிய வெறியைக் காட்டினர் தோழா

சிங்களப் படையினர் சித்தத்திற் கிணங்க
மங்களம் பாடும் மதியிலார் தோழி

வல்லரச மார்த்தாண்டர் மதிக்கு உடந்;தையாய்
கொல்வலய மாக்கும் குறியர் என்தோழா!

அப்பாவி மாந்தரை அடித்துத் கொலையிடும்
தப்பாக விரிந்தது தங்கயாழ் தோழி!

பல்கொலை பகற்கொள்ளை பாவையர் கற்பழிப்பு
சொல்லொணாக் கொடுமை செய்தனர் தோழா!

மனித உரிமைகள் மதியிடும் உலகம்
புனிதம் என்றிதை கொள்வரோ தோழி!

நெஞ்சில் கொடிய நினைப்பும் அழிப்பும்
வஞ்சப் பொறியின் வலைகளே தோழா!

குளத்தைக் கலக்கிப் பருந்துகள் இரைக்கும்
கிழக்கைச் செய்தவன் கீழார் தோழி!

இனத்தைக் கொன்று இருக்கைகள் சிங்கள
மனத்தைக் கேட்பவர் மானரோ தோழா!

நெஞ்சில் உரமில்லை நிலத்து உணர்வில்லை
விஞ்சும் களத்தில் விசமிபார் தோழி

பிள்ளையான் சிந்துஜன் பேடியார் உதவி
விள்ளும் மனிதரை வீழ்த்தினர் தோழா!

அந்நியன் சோற்றை அடிமையாய் உண்டு
செந்தமிழ் உயிரைச் சீவினர் தோழி!

வழியை மறித்து வனிதையர் இருவர்
விழியாம் கற்பை விழுங்கினர் தோழா!

புனர்வாழ் வளிக்கும் புண்ணியக் குழுவை
பிணமாய் ஆக்கிய பேய்களே தோழி!

காலப் பழியைக் கருணா டக்ளஸ்
ஞாலத் தெழுதுவர் வருகிறேன் தோழா!

(வேறு)

காட்டியே கொடுத்த வஞ்சக்
கருணவின் குழுவும் முட்டி
தோட்டியாய் உள்ளே பிஞ்சு
துடித்திடக் கொலையே கண்டார்
ஆட்சியின் பலத்தில் தின்னும்
ஆயுதக் குழுக்கள் வாலைக்
காட்டுவார் பாராய் என்று
கனிமகள் சென்றாள் அம்மா!

(30)
ஏட்டில் விழுந்த இழியர்..!


(காவடிச்சிந்து)

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்தாரடி-தமிழே
வாய்ச்சொல்லில் வீரரடி
கஞ்ச எதிரியிடும் கைப்பிடி சோற்றிலே
காட்டிக் கொடுத்தனரே-தமிழே
ஏட்டில் விழுந்தனரே!

புலம்பெயர் நாட்டிலே போட்டபிச்சை கைப்பிடியில்
மலங்களாய் திரிந்தனரே-கெட்ட
மனங்களாய் ஆனாரே!
நலங்கெட எழுதியே நாட்டின் எதிரியின்
நஞ்சினைப் பெற்றனரே-தாமே
நற்கவி என்றனரே!

பொய்யுரை சொல்லி புலிநிலம் விழுத்திட
கையுறை கொண்டனரே-தமிழே
கவிதையென் றெழுதினரே!
மெய்தரும் நாடுகள் மிகையிடக் கதைசொலி
விசமிகள் ஆயினரே-தமிழே
விடியலை முறித்தனரே!

பல்வகைக் குழுவிட பதைக்கக் கொன்றவன்
சொல்வகை சிந்துகிறான்-தமிழே
நல்லவன் போலநின்றான்!
கல்மனம் கொண்டவர் கனிநிலம் வீழ்த்திட
அல்லவை சொல்லுகிறார்-தமிழே
அன்னையைக் கொல்லுகிறார்!

என்னவள் தமிழேயிந்த எழியவர் புத்திமாறி
சொன்னதால் துவள்கிறேனே-துரோகம்
என்றேதான் கவல்கிறேனே!
அன்னவர் அறிவேபெற்று அன்னைமண் போரில்வந்து
நின்றிடமாட் டார்தானோ?-நிலத்தின்
மன்னவரா வார்தானோ?



(31)
தமிழாள் காதல்


(வருவேன் என்று சொல்லிப் போனவளை நினைந்து..)

எடுப்பு

காதல்வயப் பட்டுவிட்டேன் காதல் செய்யடி-என்
கைப்பிறையில் ஏணையிட்டேன் கண்ணு றங்கடி-தமிழே

தொடுப்பு

சோதிவடி வானவளே சிந்து அல்லவா-நீ
தீண்டுமின்பம் எந்தனுக்கு தென்றல் அல்லவா! –தமிழே

முடிப்பு

தென்னையிள நீர்சுமக்கும் தேவி அல்லவா-அடியே
தீங்குரலில் நீமொழிந்தால் சொர்க்கம் அல்லவா
என்னெழுத்தும் என்னிசையும் எழுச்சி அல்லவா-தேச
ஏந்திளையே உன்னணைப்பு உணர்ச்சி அல்லவா!

விடியலிசை வேங்கைமண்ணின் வேதம் அல்லவா?-தேச
வீரர்மனம் உன்னுணர்வின் விசிறல் அல்லவா!
பிடிசாம்பர் ஆயினும்யான் பிரியேன் உன்னையே-தமிழர்
பேரழகே காதல்நிலப் பேசும் தெய்வமே!

வருவேன் என்றவளே வாராய் அன்னமே-எந்தன்
வண்ணஇசை உந்தனுக்கு வடிவம் சொர்ணமே
கார்குழலே கனிமொழியே களத்தின் மன்றமே-என்னைக்
கட்டியாளும் செந்தமிழே கவிஞன் அன்றிலே!


(32)
அவனொரு தமிழனில்லை!


(வருவேன் என்று சொல்லிப் போனவளை நினைந்து..)

எடுப்பு

அந்நிய னோடுநின்று தன்னினம் கொன்றவன்
அவனொரு தமிழன் இல்லை-
தொடுப்பு

சிந்திய விழிமடை செய்திடும் கொலைவெறிச்
சிதறுவான் தமிழன் இல்லை-அந்த

எந்தையும் தாயும் இருந்து குலாவிய
செந்தமிழ் நிலப்பரப்பு-அதில்
வந்தவன் எதிரி வாலிலே தொங்கிடும்
மந்தியோர் இழிபிறப்பு

எட்டப்பன் தோட்டி தொட்ட பரம்பரை
இன்றும் வந்ததடி-இந்தத்
துட்டப்பர் கூடிக் தீர்த்தார் தமிழனை
தேசம் வெந்ததடி- தமிழ்த்
தேசம் வெந்ததடி1

எந்தனின் மகளே ஏந்திளைத் தமிழே
எங்குநீ சென்றனையோ?-அடி
வந்தொருகால் உந்தன் வண்ணம் கொடுத்திடில்
சிந்தை தெளியுமன்றோ-மனச்
சிறைகள் உடையுமன்றோ?

(33)
என்பிள்ளை ஆனவர் வேங்கை!


(போரும் கொழும்பும் சொல்லியபடி தமிழாள்..: சமநிலைச் சிந்து)


வந்தேனடா அன்பே வந்தேனடா-துருவ
வண்ணக் கவிஞயான் வந்தேனடா
சிந்தாகு லம்கொள்ளத் தேவையில்லை-அந்தத்
தேசக் கொடியோர்க்கு மீட்சியில்லை! -வந்தே

கொழும்பில் தமிழனை விரட்டினார்;-மகிந்த
கூட்டக் கொடியவர் மிரட்டினார்
இழுத்துத் தெருவிலே துரத்தினார்-இந்த
எழியர்கள் கொடிய மரத்தினார்! -வந்தே

தமிழர்க்கு உண்டல்லோ நாடு- சொன்னார்
தப்பிப் பிழைத்தங்கே ஓடு
உலகுக்கண் கண்டது கேடு-இது
ஈழம் உணர்த்திய வீடு! -வந்தே

எல்லாமே பார்த்துநான் வந்தேன்-அட
எங்களின் வன்னிப்போர் கண்டேன்
சொல்லால் அடங்குமோ பெற்றி-புலித்
தேசம் அடைந்திடும் வெற்றி! -வந்தேன

என்னே படையணி நாங்கள்-அவர்
என்பிள்ளை யானவர் வேங்கை
மண்ணின் விடியல்வந் தாச்சு-அந்த
மகிந்தப டைகள்போய் யாச்சு! -வந்தேன

அந்நியன் ஒட்டிய துட்டர்-அவர்
அழிவர் பகையொடும் ஒட்டர்
செங்களம் வெல்லுவர் புலிகள்-ஈழத்
தேசத்தில் ஓடுவர் எலிகள்! -வந்தேனடா

கிழக்கும் நம்வசம் ஆகும்-தமிழ்க்
கீதைமண் நிமிர்ந்து கிடக்கும்
முழங்கும் சுதந்திர தாகம்-ஈழம்
முகிழ்த்திடும் இனியிலைத் தூரம் ! -வந்தேனடா

(34)
வைகாசி பதினொன்று
வரலாற்றுப் பேரணி !


(பேரணி பற்றிய தமிழாள் பார்வை: அறுசீர் விருத்தம்)


என்னரும் புலவா கேளாய்
எழுச்சியின் சின்னம் காண
சென்றனள் இவளே அந்த
செனிவாவென் நகரம் தன்னில்
ஒன்றென உள்ளம் பொங்க
உணர்ச்சியில் இமயம் என்க
நின்றனர் தமிழர் அந்த
நிகழ்வொரு வரலா றாமே!

வான்மழை தூவும் போதும்
வரும்பசி ஊர்ந்த போதும்
தேன்தமிழ் விடியல் ஆக்கித்
திரண்டனர் அய்நா வாக்கி
நான்மறை வேதம் சொல்லும்
நற்றவம் போலும் ஒன்றித்
தோன்றினர் உள்ளத் துள்ளே
தேசிய ஒளியே கண்டார்!

பொய்யினில் புத்தம் பேசி
பேயர சாட்சி வீசி
கையினில் கொலைவாள் ஏந்தி
கடத்தலும் காசும் கொள்ளை
எய்திடத் தமிழ்மண் மீது
இயமனாய் நிற்கும் கிந்தன்
பொய்வரை எல்லாம் பிய்த்துப்
போட்டனர் புலமெல் லாமும்!

ரொறன்ரோ வென்னு முந்தன்
தொழிற்றுறை சிறக்கும் வெள்ளை
நிறந்தனில் தாய்மண் நோக்கித்
தேசத்தின் படிவம் காட்டி
கறந்தபால் முலைக்கே றாத
கதைதரும் சிங்க ளத்தின்
வறண்டதோர் போக்குக் காட்டி
வரலாறாய் தமிழர் வந்தார்!

ஒன்றல்லப் பத்தும் அல்ல
ஸ்காபரோ நகர முன்றில்
என்றுமே காணாக் கூட்டம்
இந்தநாள் கண்ட தாமே
கொன்றிடும் லங்கா காட்டி
குதறிடும் படைகள் காட்டி
வன்பதை குருதி வெள்ளம்
வாதைகள் முழுதும் சொன்னார்

தாயொடு, தந்தை, பிள்ளை,
தங்கையர், அண்ணா, கையில்
சேயொடு அன்னை, தள்ளும்
துருத்தியில் உள்ளோர் கூட
ஆயநல் உலகைப் பார்த்து
அன்னைமண் அங்கீ காரம்
நேயமாய் செய்வீர் என்றே
நிறைந்தனர் தமிழர் கூட்டம்!

அரசியல் வெள்ளை நாட்டின்
அரங்கினர் பலபேர் வந்தார்
உரசிடும் லங்கா ஆட்சி
உயிர்வதை எடுத்துச் சொன்னார்
குரலது தமிழர் ஒன்றாய்
குழுமிய இதய வேட்கை
உரையிடும் மனித நேயம்
உள்ளிடச் சென்றார் கண்டேன்!


(35)
குலத்தை அழிக்கும்
கோடரிக் காம்புகள்!

(கோடரிக்காம்புகள்-புலவனின் வருத்தம் அறுசீர் விருத்தம்)
மனித நேயம் என்றுரைத்தார்
மானத் தமிழச்சி கேளடிநீ
இனியும் உலகம் கூறுவதேன்
எங்கள் இனமென்னும் அடிபடவோ
குனியும் ஒவ்வோர் மணித்துளியும்
குருதி எடுக்குது சிங்களமே
கனமாய்க் கழிந்த காலத்திலே
காடைய ரசுபோல் காண்கிலையே!

ஈனத் தமிழர் என்றுளராய்
இனத்தை அழிக்கும் எட்டப்பர்
கூனர் கூட்டம் கொடுங்கூட்ட
கொல்லும் அரசின் கூலிகளாய்
மானம் இழந்து புலமெங்கும்
மண்ணுக் கெதிராய் நடக்கின்றார்
தானை எடுத்த செந்தமிழர்
தங்க நிலத்தை உடைக்கின்றார்!

பொய்யை உரைத்து புலம்கொள்ளும்
பெரும்சார் நாட்டை பேதலிக்க
மெய்யை மறைத்து உரைக்கின்றார்
வெள்ளை உள்ளம் உடைக்கின்றார்
கைய்கள் நிறைக்கும் காரியமாய்
காட்டிக் கொடுக்கும் பகைத்தமிழர்
செய்கை ஒருநாள் வரலாற்றில்
செதுக்கும் பாராய் பழியேடு!

நிலத்தை எண்ணும் பலமனிதர்
நெஞ்சில் தமிழர் துயர்கொள்வார்
புலத்தில் உழைக்கும் உத்தமரை
பொல்லா எழியர் பொறிவைத்தார்
மலத்தை தின்னும் மதிகெட்டார்
மாட்டிக் கொடுக்க கதைகட்டி
குலத்தை அழிக்கும் செயல்கண்டேன்
கொடியர் ஒருநாள் அழியாரோ?

கொல்லும் கொடிய விசமிகளால்
குதற விழுகும் தமிழ்ச்சாதி
அல்லும் பகலும் ஐந்தாறு
அருமென் மனிதர் கொன்றிடுவார்
வெல்லும் விடியல் வெற்றிவர
வேட அரசும் இனப்பகைவர்
நில்லா தொழிந்து ஓடிடுவார்
நிசமே இதுதான் வரலாறாம்!

(36)
கிழக்கின் துயரம்!

(மீண்டும் கிழக்கைப் பற்றிய புலவனின் வருத்தம்)
(ஒயிற்கும்மி)

காட்டிக் கொடுத்தவக் கஞ்சலால் தென்தமிழ்
கார்நிலம் வேகுதடி-எங்கள்
ஊர்நிலம் சாகுதடி
நீட்டிய துப்பாக்கி நீசர் படையினால்
நெல்நிலம் தீயுதடி-தமிழர்
கொல்நிலம் ஆகுதடி

ஆதித் தமிழ்மண்ணை கூதி யரசினர்
ஊதி அழித்தனரே-தமிழர்
வீதி துரத்தினரே
நீதித் தமிழ்நிலம் நீசர் பறித்திடும்
நெட்டுரம் கண்டதடி -கிழக்கு
பட்டுமண் வெந்ததடி

தொப்பிமலைக் காட்டை துடைத்துவிட்டோ மென்றுமே
அப்பியாசம் காட்டுகிறார்-மகிந்தர்
உப்பிபருத்து விட்டார்
எப்படித்தான் தாய்மண்ணை ஒப்புவிப்போம் என்றெண்ண
இவர்கள் மறுத்துவிட்டார்-மனித
சுவடை அறுத்துவிட்டார்!

பனாகொடைக் கட்டில் படுத்திருக்கும் கருணா
வினாவிடை மீட்டுகிறார்-அந்நியன்
விருந்தை வாட்டுகிறார்
கனாவிலும் காணாத காசையே தமிழரைக்
கடத்தியே வாங்குகிறார்-என்றரச
மடத்தினர் சொல்லுகிறார்!

படைகள் துணையுடன் பட்டபகல் கூட
உடைநகை கொள்ளையிட்டார்-யாழ்
கடையெலாம் துள்ளுகிறார்
கடையர்கள் கூட்டத்தை கண்டால் யாரெனக்
காட்டவே கூடாதாம்-கோத்தபாயா
காட்டமாய் உத்தரவாம்!

கடத்திப் பறித்திடும் காசைக் கரிபியன்
இடத்தில் பதுக்கிவிட்டார்-கொலைஞர்
மடத்தைப் புதுக்கிவிட்டார்
வடத்தைப் பேச்சென்று மகிந்தரைப் போரிலே
வார்க்குது பேருலகம்-காசில்
ஈர்க்குது வல்லுலகம்!

வீரப் புலிக்களம் ஆரப் பயிற்சியில்
கூராய் எழுகிறது-வன்னியில்
போரைப் பயில்கிறது
சூரர் மகிந்தவின் சுத்தல் விடைபெறும்
நேரம் வருகிறது-தமிழீழ
தேசம் மலர்கிறது!



(37)
நிசமும் நிலமும்

(எண்சீர் விருத்தம்-நிலமகள் உறுதி கூறல்)

வேங்கைநிலம் ஒருநாளும் தோற்ப தில்லை
விசத்தீயர் பழிக்காதை நிலைப்ப தில்லை
வீங்குதடத் தமிழர்தோள் வீழ்வ தில்லை
விருந்துண்ணப் போனவர்கள் நெடுநாள் இல்லை
மூங்கிலிசைக் கீதம்போல் முகிழ்க்கும் வெற்றி
முடுக்காணை அரசாட்சி முடியும் சுற்றி
பூங்காதைப் பொன்னாட்சி பொறிப்பர் ஈழப்
புத்தகமே தத்துவமாய் பூமி காட்டும்!

நீங்காத துயரங்கள் தெறிக்கும் அந்த
நிலவோலம் அப்பாவி நெறியார் பட்ட
தூங்காத இரவெல்லாம் ஓடிப் போகும்
துச்சானர் ஆயுதங்கள் தூர்ந்து போகும்
மாங்காடு குயிலிசைக்கும் மயிலும் ஆடும்
மானமுள்ள தமிழ்ப்படையார் மகிழும் கொற்றம்
பூங்காடு வசமாகும் பொறிக்கும் ஈழம்
பெரும்நீதி தர்மத்தின் பொன்னே டாகும்!

எட்டப்பர் துட்டப்பர் எழியர் காக்கை
இனமான மனிதரெலாம் எடுப்பர் ஓட்டம்
கெட்டப்பர் டக்கர்கள் தார்த்தன் கூடி
கேடுவைத்தான் கருணாவும் பெற்ற குண்டுச்
சட்டியிலே ஓடுகின்ற சவாரி எல்லாம்
சஞ்சாரம் தேடுமொரு சரிதம் காண்பார்
கட்டியர சாளுகின்ற காலம் மண்ணில்
கரிகாலன் படைகாணும் காணும் வையம்!

கோத்தபாய ராஜபக்ச குடும்பம் என்று
கொடும்வாதை கொடுத்தாரின் காலம் போகும்
நீத்தார்கள் இன்றுவெங்கள் நிலத்தில் நின்று
நிலப்போரில் இன்னுயிரை நிறைத்துப் போந்தோர்
காத்துவரும் கோவில்போல் சிதைகள் காட்டும்
காலத்தின் பெருஞ்சுவடு கல்லில் ஆர்க்கும்
கூத்தடித்த பண்டாக்கள் குள்ளன் ஜேயார்
கொடும்வாதை சகாப்தத்தின் கூற்றம் ஓடும்!

மாவீரர் தினம்வந்து மறைகள் பொங்கும்
மண்பாடும் தினம்வந்து மகிழ்வு காட்டும்
பூவாகும் தேசப்பண் பொதிந்து மீட்டும்
பெரும்வையத் தேசெங்கும் புட்கள் பாடும்
தேவாரம் போற்காதை புலிகள் வீரம்
திருப்பாக்கள் போலாகும் தேசம் நல்கும்
பாவாடும் செந்தமிழிற் பரணி சொல்லும்
பார்த்துநான் வருவேனே பார்ப்பாய் அந்நாள்!
(வேறு)
என்றுரைகள் சொல்லியென் தமிழாள் சென்றாள்
இவழென்னை அழகூட்டி இயன்ற காதை
மன்றுரையாய் உங்களுக்குச் சொன்னேன் யானே
மனம்தன்னில் வியாபித்த மங்கை தன்னை
பொன்தமிழில் யானாக்க புகழார் நாடு
பூமியிலே தானுதிக்கப் பிறந்த ஏடு
நின்றுவொளி பரப்புமிது நிசத்தின் கோடு
நிலமகளாள் காவியமே நிலைக்கும் ஊழி!

சுபம்

(தேசகாவியம்-2007 எழுதியவை முற்றிற்று)

No comments:

Post a Comment