Saturday, March 14, 2009

தமிழகமே

தமிழகமே தாங்கும் வெற்றி!

முத்துகுமார் எரிந்தான்தீ எங்கே போச்சு?
முத்தமிழா உன்கதிதான் என்ன ஆச்சு?
சத்தியத்தை எழுதியவன் தர்மம் போமோ?
சாக்கடையில் எங்கதுயர் வீழப் போமோ?
செத்தவர்கள் எதையெண்ணிச் செத்தார் தாமோ?
சிங்களத்தை தூண்டுபவர் வெல்லத் தானோ?
எத்துபவர் எத்தட்டும் ஈழம் எண்ணி
இருப்பவர்க்கே தமிழகமாய் ஏற்று வாரீர்!

அமைதிபடை என்றுவந்த அம்சம் விட்டு
ஆறாயி ரம்மக்கள் அன்று கொன்றார்
மமதைப்பேய் கொண்டவர்கள் மாதர் தம்மை
வல்லுறவில் சீரழித்தார்; வாட்டிப் போந்தார்
சுமையெல்லாம் கொடுத்தவரே சிங்கப் பேயைத்
தூண்டியின்று ஈழத்தைத் சாவாய் வைத்தார்
எமையெல்லாம் இறப்புக்கு இட்டார் தம்மை
இன்தமிழா வாக்கிட்டு ஏற்பாய் தானோ?

ஓருகையாய் ஈழமதை எண்ணி நிற்கும்
எழும்தமிழர் கையோங்கக் காண்பீர்; எங்கள்
இருகையால் தொழுகின்றோம் எங்கள் முந்தை
இன்பிறப்பே தமிழகமே உங்கள் வெற்றி
தரும்வாக்கில் எங்களுயிர் தாங்கும்; இல்லைத்
தறிக்கும்கைச் சூனியங்கள் தந்தே நிற்கும்
பெரும்சாவைச் சுமப்பதற்கே பெற்ற மண்ணின்
பெருங்கதைகள் இருக்குமடா பூப்பாய் நெஞ்சே!

பத்துத்த லைமுறைக்கும் பட்டே போகப்
பாடையிடக் கோத்தபாயன் பார்க்கச் சொன்னான்
செத்துப்போ என்பதுவே தீர்ப்பே என்று
சொல்லுகின்ற சிங்களத்தில் என்ன உண்டு?
கத்துமணித் தமிழ்க்கடலாய்க் கண்ட மண்ணே
கதறியழும் தமிழர்களைக் காண்கப் போமோ?
முத்துமணித் தமிழகத்தின் முன்னே நிற்கும்
முழுப்பணியும் கொண்டுவரும் வெற்றி வாக்கு!

-புதியபாரதி

1 comment:

  1. கருனனிதிக்கு புலிகல் கொலை மிரட்டல்?
    மலிவு விளம்பரம் தேடுவதில்,தமிழக அரசியல்வாதிகள்,மிக மிக மட்டமானவர்கள்

    ReplyDelete