Monday, July 20, 2009

கலைந்த என் தேசம்.!



கலைந்து போய்க்கிடக்கிறது என் தேசம்
நிலா தந்து போன வானம் - தினம்
பிணம் பெய்து போகக்
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்...!

நிறைந்த வெளிகள் தோண்டி - என்
உறவுமறைந்த குழிகள் மூடிப் - பல
திறந்த முகாம்கள் வந்த பின்பு
கலைந்துபோய்க் கிடக்கிறது என் தேசம்..!

நீதி தவறிய அரசும் - இந்தியச்
சூது நிரப்பிய வஞ்சமும் - கலக
வாது ஏற்றிய சங்கங்களும் - எமக்கு
முக அரிதாரம் அப்பிப் போனதனால்
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.

சிதறிய அங்கமும் உடலும் - மணக்கும்
குதறிய காயமும் வடுவும் - நெடுக்கும்
கதறிய தாயும் சேயும் உறவும் -மேலும்
,தயம் பிளக்கும் நினைவும்
சேர கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்!

சூழ்ந்த கடல் என் கடல் - அதைச்
சூழ்ந்த நிலம் என் நிலம் - ,தைச்
சேர்ந்த புலம் என் குலம் - நினைச்
சார்ந்த ஈழம் தமிழ் ஈழம் - என விண்ணைக்
கவர்ந்த குரல்வளை நெரிக்கப்பட
மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்.!

ஆக மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்..
மரித்த தாய் மார்புறிஞ்சி - தன்னுயிர்
தரித்த சேய் கண்டபின்பு
மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்!

கல்லறை நீளும் வயல் வெளிகள் - நெல்
புதைந்து எலும்பு செழிக்கும் குழிகள் - செல்
பொழிந்து தளும்பிக் கொடுக்கும் நர பலிகள் -கல் உம்
கனிந்து உருகும் கண்ணீர்க் கதைகள் - எல்லாம் கண்டு
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.!

விளைந்து காலெடுக்கும் வெடிகள் - பல
பறந்து வால்வெடுக்கும் குண்டுகள் - சில
கழிந்து கற்ப்பெடுக்கும் அரக்கர்கள் - நில
அளந்து சூறையாடும் குண்டர்கள் - என்று
நின்று நீளும் பட்டியல் தாளாது
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.!

-துர்க்கா
(ஒரு இளம்கவியின் நெஞ்சக் குமுறல்)

No comments:

Post a Comment