Saturday, July 4, 2009

கரும்புலி வணக்கம்..!


ஆடி ஐந்தென்றால் ஓடிவிடும் கொழும்பு..

இப்பவும் மூடித்தான் இருக்கும் சில
கதவுகள்..

ஐம்பத்தியெட்டு ஆடி..
எண்பத்தி மூன்று ஆடி..

ஓட ஓட வெட்டி தமிழனைப்
புதைத்த ஆண்டுகள்..

காடுவெட்டிப் பக்சாக்கள்
காட்சிக்கு வந்தபிறகு வருகிறது..
இதுவும் கறுத்த ஆடி..
எங்கும் கனத்த ஆடி..

இந்த ஆடி..
மாடுவெட்டிய மகிந்தம்
மனித்ததை வெட்டிய நாட்கள் ..

முன்னர் காலம் காலமாகக்
குருதி இழந்தோம்..

இப்பொழுது கடல் கடலாகக்
கொட்டி முடித்தோம்..

முன்னர் கொஞ்சம் கொஞ்சமாகப்
பறித்தான்
இப்பொழுது மிஞ்சும்படி இல்லாமல்
எரித்துவிட்டான்..

உயிரை இழந்தோம்..

உடமைகள் இழந்தோம்..

பயிரை இழந்தோம்..

பண்பாட்டுப் பூமியை இழந்தோம்..

கற்பை இழந்தோம்..

கனியை இழந்தோம்..பிஞ்சுக்
காளானை இழந்தோம்..

எங்கள் மக்களை
உள்ளே வைத்திருக்கிது புலிஎன்று
ஓலமிட்டார்கள்..

இப்பொழுது முள்ளுக்கம்பிக்குள் அல்லவா
மோடயாக்கள் வைத்திருக்கிறார்கள்..

வேண்டுமென்றே இருந்த உலகம்..
சாம்பல் மேட்டை உருவாக்கிவிட்டு
சலனமில்லாமல் இருக்கிறது..

மகிந்தன் சன்னதித்திற்கு
உடுக்கு அடித்த இந்தியம்..
சிங்கத்துவாய்க்கு மான்களைக் கொல்லச்
செருகுவாள் கொடுத்திருக்கிறது..

சோனியத்துக்கு என்ன தெரியும்..?

அமைதிக்கு வந்து இயமமாய்த்
திரும்பியது தெரியாது..

காலம்காலமாய் ஈழமண்ணை அழித்தவருக்குத்தானே
கச்சதீவையும் கொடுத்திருந்தார்கள்..

இராட்சதனை-இராசபக்சவை உருவாக்கிவிட்டு
பராக் பராக் என்கிறது உலகம்..

தென்முனைக்கு சீனாவை இறக்கிவிட்டு
இராசபக்சனிடம் அன்பாகக்
கதைக்கிறது இந்தியம்..

இராப்பொழுதில் சல்லாபித்த எட்டப்பம்
இப்பொழுது பகற்பொழுதிலும்
இறங்கிவிட்டது..

இருபத்திமூன்று வருடங்கள் இறங்காத
பல்கலைகக்கழகத்திற்கு
இன்று இடக்ளஸ் போனாராம்..

இதற்கு என்னவிலை..?

கொழும்பில் கூட்டம் கூட்டமாய் அள்ள
இவனும்தானே கூட்டு..

ரவிராசை, மகேஸ்வரனைக் கொன்றவரின் கைகள்
இவனிடமும் அல்லவா இருக்கின்றன..

அற்புதன், நிமலராசன்..
இவர்கள் மீதான அரக்கர்கள் யார்?

எல்லாம் தெரியும்..
எல்லாவற்றையும் எங்கள்
இனமே புரியும்..

எங்கள் கன்னியரை வன்மம் புரிய எதிரிக்குக்
கொடுத்துவிட்டு அல்லவா..
அந்நியன் ஆயுதத்தோடு வருகிறான் இந்த
அகப்பைக்காரன்..

சாட்சியம்கள் சொல்வதாக வந்தவர்கள்கூடச்
சரிக்கட்டி விட்டார்கள்..

சாத்தான்கள் வந்துவிட்டார்கள்..

பாசிசங்கள் பூசிமெழுகி வருகிறது..

பூச்சுவாக்கள் மேய்க்க வருகின்றன..

நேர்மையின் வேர்கள் படைத்த
வேங்கை மண்ணை..சிங்களக்
கோர்வை வெறியர்கள் கொழுத்திவிட்டார்கள்..

பார்வைக்கு நின்ற உலகம்
பகிடிக்குக் கதைத்துவிட்டுப் பறந்துவிட்டது..

இந்தியம் சோனியம் எல்லாம்..
மலையாளியை வைத்து..
தமிழ் வாழாமல் அழித்துவிட்டனர்..


பார்ப்பனியம்..
இரண்டாயிரம் இந்துக் கோவில்கள்
அழிய-அழிக்கப்பட
சூர்ப்பனகையோடு சிங்களத்தின்
விருதுகளைச் சேர்க்கின்றன..

கரும்புலிகள் இருந்தபோது
கறுத்த ஆடி வெளிச்சம்தரும்..

இந்த ஆடி
துயின்ற ஆடி அல்ல..
துடித்த ஆடிதான்..

சிங்கத்தின் வாயில்..
செந்தமிழ்மான்..

இராட்சதன் வெல்லும்வரை
கரும்புலிகள் இருப்பில் இருக்கும்..!

செருவில் எரிந்த செந்தமிழ் நிலமே
பருக்கைகள் ஓட ஒருநாள்
இருப்புப் பிறக்கும்..

தமிழீழ வணக்கம்..!
-எல்லாளன்.

No comments:

Post a Comment