Saturday, December 27, 2008

கீர்த்தனை நாற்பது..!

புதியபாரதியின்
கீர்த்தனை நாற்பது..!


01)
வேவியூப் பிள்ளையாரே....!


பல்லவி
வேவியூப் பிள்ளையாரே விநாயகனே நானழைத்தேன்
சேவடியில் மலர்குவித்துச் சிந்துதமிழ் பாத்தொடுத்தேன் -வேவி
அனுபல்லவி

பாவடிக்கும் சிற்பி எந்தன்
பண்ணிசைக்குள் நீவிழுந்தால்
காவடிகள் தூக்கிநிற்கும்
கனகமணித் தேசம் செய்வென் -வேவியூ

சரணம்
மாவடியில் உனைப்பார்த்தேன்
மருதடியில் தேரிழுத்தேன்
மாமாங்க நீராட்டில்
மனங்குளிரத் தீர்த்தமிட்டேன்
பூமலரும் பாதமலர்ப்
பொன்கரத்து அங்குசத்தில்
சேவடிகள் பூத்துநிற்கத்
தேசமெங்கும் கோவில்கண்டேன் -வேவியூ

எண்ணத்தில் வீடமைத்தேன்
என்னிதயத் தீபமிட்டேன்
பொன்மகளை நீகொடுக்கப்
புதுமழலை முத்தெடுத்தேன்
கண்ணிமைக்குள் நீயுறங்கும்
கனகமணித் திருநாட்டில்
எண்ணிலா நாடுகளில்
இங்குனைநான் கண்டேனையா! -வேவியூ

நீகொடுத்த தேசமண்ணில்
நெருப்பழித்து நிற்குதையா
மானெடுத்த கண்விழியாள்
மண்காக்கப் போனதையா
தேனெடுத்த மலர்களெல்லாம்
துப்பாக்கி ஆனதையா
நானெடுத்த என்கரத்தில்
நீவிழுந்தால் தேசமையா! -வேவியூ

(02)
கற்பக விநாயகனே!


எடுப்பு
கற்பக விநாயகனே-பிறம்ரன்
கற்பக விநாயகனே.. -கற்பக..
தொடுப்பு
அற்புதம் படைக்கும் அருள்நிறை வாசா
அள்ளியே கொடுக்கும் ஐங்கரன் ஈசா .. -கற்பக..
முடிப்பு
கற்பனை இல்லை கதையிலும் இல்லை
அற்புதம் கண்டேன் அங்குச பாசா
நிற்பதும் நடப்பதும் நினைப்பிலும் உன்னை
நெஞ்சிலே கொண்டேன் நிலத்துயர் வென்றேன் -கற்பக

(03)
ஐங்கரா உன்னை..!


பல்லவி
ஐங்கரா உன்னை என்கரம் கொண்டேன்
அகன்றிடக் கூடுமோ இனியே! -ஐங்கரா

பல்லவி எடுப்பு
அஞ்சலென் றேநீ அபயம் அளிக்கின்ற
அருமருந் தானதோர் கனியே! -ஐங்கரா

கண்ணிகள்
அங்குச பாசா எங்கும் வியாபிகா
எங்களின் பூமி இலங்கும் விநாயகா
இங்குனைக் கனடா எங்ஙணும் கண்டேன்
ஏற்று அருளிடும் இறையுனைக் கண்டேன் -ஐங்கரா
மருதடி விநாயகா மாமாங்க நாயகா
மண்ணினைக் காக்கும் மாகரிக் காவலா
முருகண்டிப் பிள்ளையார் முடிப்பிள்ளை யாரெனும்
அருள்கின்ற தெய்வமே ஆலயம் பிறம்ரனில்.. -ஐங்கரா

(04)
பிறம்ரன் பிள்ளையாரப்பா..!


பல்லவி
பிள்ளை யாரப்பா –பிறம்ரன்
பிள்ளை யாரப்பா! -பிள்ளையாரப்பா
பல்லவி எடுப்பு
உள்ளம் ஈர்த்துத் தன்னைக் காட்டும்
பிள்ளை யாரப்பா –பிறம்ரன்
பிள்ளை யாரப்பா! -பிள்ளையாரப்பா
கண்ணிகள்
நல்லகதி நீயருள்வாய் நாடுகதி தந்திடுவாய்
நாதமெனத் திருச்சிமலை நாயகனாய் வந்தருள்வாய்
அல்லல்படும் மாந்தருக்கு ஆறுதலைக் கொடுத்திடுவாய்
அற்புதா கற்பகா அஞ்சலெனும் அங்குசா.. -பிள்ளையாரப்பா
ஆலமர அடியிருப்பாய் அரசமரம் குடியிருப்பாய்
அண்டிவரும் அடியவர்க்கு அருகினிலே நீயிருப்பாய்
காலமகள் மடியினிலே கற்பகனே காத்திடுவாய்
கைலாசப் பிள்ளையே காக்கைபதிக் கற்பகா -பிள்ளையாரப்பா

(05)
பிள்ளையாரே துள்ளிவா..!


துள்ளிவா துள்ளிவா
துள்ளிவா துள்ளிவா
தும்பிக்கை வீசியே
துள்ளிவா துள்ளிவா! -துள்ளிவா

கற்பகத்து விநாயகா
கரிமுகத்து மோதகா
உற்சவ மோகனா
ஓங்காரத் தீபகா! -துள்ளிவா

சித்திபுத்தி நாயகா
சித்திதரும் தூயவா
முத்திதரும் மேதகா
முதல்வணக்க மானவா! -துள்ளிவா

விபீசர்க் கருளிடவே
விமானம் இழுத்தவா
அபிசேட நர்த்தனா
ஆனந்தக் கீர்த்தனா! -துள்ளவா

திருச்சிமலைப் பிள்ளையே
மருதடியின் கிள்ளையே
முருகனுக்கு அண்ணனே
ஞானப்பழ மன்னனே! -துள்ளிவா

எலிவா கனத்திலே
எழுந்தருளும் தெய்வமே
கலியுகத்துக் கரிமுகா
காத்தருளும் சோதியே! -துள்ளிவா

விசயனுக்கு நாதனே
வித்துவத்தின் போதனே
அசையாமல் வீற்றிருந்து
அருள்கொடுக்கும் கீதனே..! -துள்ளிவா..

(06)
ஓங்கார நாயகா..!


பல்லவி
ஓங்கார நாயகா ஓடுமெலி வாகனா..
ரீங்காரப் பசனையிலே தித்திக்கும் விநாயகா..! -ஓங்கார
பல்லவி எடுப்பு
ஆங்கார கொண்டமன ஆணவத்தைப் போக்கிவிடும்
பூங்காடு தந்துவரம் பொங்குகின்ற முன்னவா.. -ஓங்கார
கண்ணிகள்
துன்பமே சூழ்ந்திடும் துயரங்கள் தந்திடும்
எம்பகை தீர்க்கவே எழுந்துநீ ஓடிவா
பொங்குமண் மீதிலே பொன்விடியல் பாடிவா
பிள்ளையா ரப்பனே பிறம்ரனே நாடிவா..! -ஓங்கார

மானுடம் பூசவா மனிதம் பேசவா
கூனிடும் மாந்தரின் குறைகள் தீர்க்கவா
பானடம் ஆடிவா பக்குவம் கூறிவா
பக்தர்கள் யாவரும் பாவம் தீர்க்கவா.. -ஓங்கார
(07)
பிறம்ரன் பிள்ளையாரப்பா..!


பல்லவி
பனிபடரும் பிறம்ரனில் பாங்குடன் தானிருந்து
பக்தரைக் காத்தருளும் பிள்ளை யாரப்பா?-கற்பகப்
பிள்ளை யாரப்பா! -பனிபடரும்..

தனியொருவர் இல்லையென்று தமிழரெலாம் சேர்த்துவைத்த
இனியவனே பிறம்ரநகர் இலங்கும் கரிமுகனே.. –பனிபடர்ந்த
கண்ணிகள்
கைகூப்பிக் கும்பிடுவார் காதல்மனம் ஆகிடுவார்
கைலாசப் பிள்ளையுனை கண்டுமகிழ்ந் தாடிடுவார்
மெய்கூப்பிச் சதுர்த்தியிலே வேண்டும்வரம் கேட்டிடுவார்
அய்யாவுன் திருப்பதியில் ஆயிரமாய்த் திரண்டிடுவார்.-பனிபடர்ந்த

(08)
யார்யார்யார் யார்?


பல்லவி
யார்யார்யார் யார்யார்யார்-பிள்ளை
யார்யார்யார்-அந்தப்பிள்ளை
யார்யார்யார்?
தேர்ஓடும் பிறம்ரனின் தென்றல் தவழ்ந் தாடிடும்
யார்யார் யார்-அந்தப்
பிள்ளை யார்யார்யார்? -யார்யார்யார்

அனுபல்லவி
ஊர்எல்லாம் வீதியின் ஓடுமருங் காலயம்
இருந்தருளும் தெய்வமாய் இலங்கும் பிள்ளையார்.. –யார்யார்யார்

சரணம்
கார்மழையில் அவனிருப்பான் கடுமுழைப்பில் அவனிருப்பான்
போர்முனையும் அவனிருப்பான் புத்தகத்தும் அவனிருப்பான்
ஏர்முனையில் அவனிருப்பான் இல்லமும் தானிருப்பான்
இறைவனுக்கு முந்தியதோர் இறைவனாய வீற்றருப்பான்..யார்யார்

(09)
தும்பிக்கை தானிருந்தும்
தூக்கவில்லையே!


பல்லவி
தும்பிக்கை தானிருந்தும் தூக்க வில்லையே-என்னைத்
தூக்கவில்லையே-அவன்
தூக்கவில்லையே! -தும்பிக்கை

அனுபல்லவி
நம்பிக்கை கொண்டபிள்ளை நல்லமனை வந்திருக்கும்
நல்லூர்க் கைலாச நர்த்தனனின் பிள்ளையவன ;-தும்பிக்கை..

சரணம்
அம்பிகைக்கு வாய்த்தமகன் அய்யனுக்கு ஏற்றமகன்
கும்பிடும் அடியவர்க்குக் குறையெல்லாம் கேட்குமவன்
முடிப்பிள்ளை யாரென்பான் முருகண்டி யானென்பான்
மூஞ்சூறு வாகனனாம் மோதகப் பிரியனவன் -தும்பிக்கை..

அங்குசன் ஐங்கரன் பொங்குமா சங்கினன்
எங்கும் நிறைந்தவன் எங்கள் ஐயன்
மத்தள வயிறவன் வலம்புரி நாயகன்
சித்தியும் புத்தியும் சேர்ந்த மகன் -து..

(10)
உச்சிமலை விநாயகன்!


எடுப்பு
உச்சிமலை வீற்றிருக்கும் ஓங்கார நாயகனே
அச்சமில்லை என்றுரைக்கும் அலங்காரக் கற்பகனே -உச்சிமலை

தொடுப்பு
முச்சதகம் பாடினின்றேன் முன்விழுந்து தெண்டனிட்டேன்
பச்சைமலர் சாத்திவந்த பல்லக்கைச் சுற்றி வந்தேன் -உச்சிமலை

முடிப்பு
வில்வம்பூ செவ்விளநீர் வேப்பிலையும் மாவிலையும்
செந்தா மரைப்பூவும் செம்மா துளைப்பழமும்
நல்லநறும் கனிகளொடு நற்சாத்துப் படிகளிட்டு
பூங்காவ னத்துவந்த பிறம்ரநகர்க் கற்பகனே -உச்சிமலை

அச்சுவெல்ல மோதகமும் அபிஷேகம் பால்தயிரும்
சந்தனமும் குங்குமமும் சாத்திவரும் திருநீறும்
உச்சிநுதல் மேலிலங்கும் ஒளிவீசும் முடிபுனைந்த
அண்ணாம லைமகனே ஐங்கரனே பிறம்ரனில் - உச்சிமலை

(11)
விக்கின விநாயகா வா வா வா!


மத்தள வயிறனே வா வா வா
மருதடி விநாயகா வா வா வா
கைத்தல மங்குசா வா வா வா
காரிய முதல்வனே வா வா வா!
மாம்பழம் வென்றவா வா வா வா
மாமாங்க நாயகா வா வா வா
சித்தியும் புத்தியும் சேர்ந்தே வா
சுண்டெலி வாகனா வா வா வா!
முருகண்டி யானே வா வா வா
முடிப்பிள்ளை யாரே வா வா வா
சுழிபுரப் பிள்ளையார் வா வா வா
சித்தாண்டி விநாயகா வா வா வா!
வரசித்தி விநாயகா வா வா வா
வல்வெட்டி விநாயகா வா வா வா
சித்தங் கேணியா வா வா வா
சேவித் தருளவே வா வா வா!
கீரி மலையனே வா வா வா
கேள்வினை அறுப்பாய் வா வா வா
அறுமுகன் அண்ணா வா வா வா
அஞ்சுதல் அறுப்பாய் வா வா வா!
தாண்டவன் பிள்ளை வா வா வா
தாய்உமை மைந்தா வா வா வா
பிறம்ரனின் பிள்ளையார் வா வா வா
வேவியூப் பிள்ளையே வா வா வா!
தண்டிகைத் தேரனே வா வா வா
தமிழீழ நாயகா வா வா வா
மண்டூர் வாசகா வா வா வா
வணங்கும் முதல்வனே வா வா வா!

(12)
ரொறன்ரோவின்
கந்தனே.. கந்தனே..


பல்லவி
கந்தனே கந்தனே –ரொறன்ரோக்
கந்தனே கந்தனே.. -கந்தனே..

அனுபல்லவி
சிந்தையிலே எந்தனுக்குச்
சேவித்த திருமுருகா சுந்தரா சிவபாலா -கந்தனே..

சரணம்
கருணை பொங்கும் கந்தனே அந்தக்
கைலை ஈசன் மைந்தனே
அருள் கொடுக்கும் வேலனே என்றும்
அஞ்சேல் என்னும் பாலனே.. -கந்தனே..

தேடிவந்த அடியவர்க்குத் தினம்
துன்பம் தீர்க்கும் தேவனே
நாடிவந்தோர் வேண்டும் வரம்
நல்குமருட் குமரனே..! -கந்தனே..

பால னாக ஞான வேத கான மாக ஒளிர்பவன்
சீல னாக தேவ னாக தீய மாந்தர் மாய்ப்பவன்
வேல னாக வீர னாக வேங்கை யாக நிற்பவன்
மோதி சூரன் வீழ நாடு வாகை யாகக் காப்பவன் ..கந்தனே!

(13)
ஐயனையனை ஆடிப்பாடுவோம்!


பல்லவி எடுப்பு

ஐயனையன் என்றுசொல்லி அனலைநிலம் காப்பவனை
மெய்வருத்திப் பாடிநிற்பாய் மனமே!.... -ஐயனையன்
தொடுப்பு
கையெடுத்துக் கும்பிடவே கவலையெல்லாம் தீர்ப்பவனை
நெய்விளக்கு ஏற்றிவைப்பாய் தினமே.. -ஐயனையன்
கண்ணிகள்
அனலைமண் ஆர்த்தொலிக்கும் அலைகடலின் மீதிருப்பான்
மனதை உருக்கிவந்து மனைவாசல் தனிலிருப்பான்
கனதியாய் ஓடிவரும் காண்டா மணியொலிப்பான்
சுனையாகி ஊற்றாகிச் சிந்திசையாய்த் தமிழ்கொடுப்பான் ...
-ஐயனைய
பாடி ஆடி கூடி ஓடி நாடித் தேடி ஆர்பவன்
வாடி நோக வாதை போக கோடி கோடி தருபவன்
நேர கால பூசை யாக ஊரி லாசை கொண்டவன்
வீர தீர தூர னாக வேளை யாவும் வருபவன்! -ஐயனையன்

(14)
அனலை ஐயனார்!
அனலைஐயன் கோவிலிலே
அற்புதப்பண் பாவினிலே
மனதிலிசை வார்த்தெடுத்துப் பாடடா-உன்றன்
வாழ்வினிக்க அருள்கிடைக்கும் பாரடா! -அனலைஐயன்

தேரெடுத்து வீதிவந்து
தேவனையன் சோதிதந்தால்
கூடிவந்த தொல்வினைகள் மாளுமே-அனலைக்
கொஞ்சுமண்ணில் மஞ்சுமழை ஆகுமே! -அனலைஐயன்

பூரணையும் புட்கலையும்
பூத்தமுகம் அருகிருந்தால்
ஆரமென அருளெழுந்து வீசுமே-ஐயன்
அன்புமனம் மண்ணிலெங்கும் ஆகுமே! -அனலை ஐயன்

கண்ணிலவன் காட்சிதரக்
கன்னலெனக் கவிமலரக்
என்மனது ஊற்றெடுத்துப் பாயுமே-எங்கள்
எழில்நிலத்துத் தமிழ்சுரந்து ஆளுமே! -அனலை ஐயன்

காதல்மனம் கொண்டவனை
கனியருளின் மன்னவனை
போதெல்லாம் வாழ்த்துமொலி கேட்;குமே-இன்பப்
பூவிரிந்து தாய்நிலமே பூக்குமே! -அனலை ஐயன்

(15)
கார்மழையும் அவனே
காற்றும் அவனே
!

காரிறுக்கும் மழையிருப்பான்
காற்றினிலும் அவனிருப்பான்
பூவிரியும் சோலையெல்லாம்
பூத்திருப்பான் எங்களையன்! -காரிறுக்கும்

ஏழைகளின் ஏரிருப்பான்
எழுத்துகளின் வீறிருப்பான்
பாவிகளைச் சரித்திடுவான்
பகைஒட்டர் எரித்திடுவான்! -காரிறுக்கும்

தாழையிலும் அவனிருப்பான்
வாழையிலும் அவனிருப்பான்
ஆழநீர் ஊற்றெடுக்கும்
ஆற்றுமணல் மீதிருப்பான் -காரிறுக்கும்

கற்பனையும் அவனெனக்கு
கவிப்புனலும் அவனெனக்கு
அற்புதமே எந்தனுக்கு
ஐயனவன் அருள்கணக்கு! -காரிறுக்கும்

ஓடோடி வந்திடுவான்
உறுதுணையாய் நின்றிடுவான்
நாடோடி ஆனபின்பும்
நாடிமனம் வென்றிடுவான்! -காரிறுக்கும்


(16)
நயினார்குளத் தெய்வம்


எடுப்பு

நயினாகு ளம்மேவும் நல்லனலை நிலமடியில்
அய்யனென வீற்றிருக்கும் ஐயனார்! -நயினா

தொடுப்பு

மையநறும் மாதரொடு வள்ளலெனக் காதல்செய்து
பொய்கைவனம் பூத்திருக்கும் ஐயனார்! –நயினா

முடிப்பு
கார்முகிலும் மழையெடுப்பான் கடலலைக்கும் தடைவகுப்பான்
ஏர்உழவும் அவனிருப்பான் எழுத்தினிலும் அணிவகுப்பான்
தாய்மனதை ஐயனவன் தங்கமென வார்த்திருப்பான்
சேயெனவெ அடியவரைச் சிறகினிலே சேர்த்திருப்பான்! -நயினா..

குறையொன்றும் தாரான் நிறைசெல்வம் ஈவான்
நறைகொண்ட கனியாய் நல்வாழ்வில் இனிப்பான்
மறைமாந்தர் வேதம் மந்திரத்தில் ஒளிர்வான்
கறையொன்றும் வையான் காவலிட்டு அருள்வான் -நயினா
-
(17)
பள்ளம்பலம் குமரக்கோட்டப்

பாசமுருகன்!

பல்லவி;
பள்ளம்புலம் வதியும் உள்ளக் குமரனவன்
பாரெனக்குக் காட்டுவித்த பாச இறைவன் -பள்ளம்...
அனுபல்லவி

வெள்ளவயல் சூழ்ந்திருக்க வீற்றிருக்கும்; வேல்முருகன்
சொல்லியெனைக் கனடாவில் சேர்த்துவிட்ட மால்மருகன் -பள்ளம்

சரணம்
ஓரிரவு என்விழியில் உமைபாலன் கோவிலிலே
நானிருந்து பாடுகிறேன் நம்பியெனைப் பிடித்து
வாரெடுத்து விளையாடி வண்ணமிட்டான் காலையிலே
வருகவென அழைப்புவந்து வந்தேன்யான் துருவமப்பா -பள்ளம்

சோதனைக்குப் பாதைசொல்வான் சுந்தரத்துத் தமிழளித்தான்
வீதிவழி வீற்றிருந்து விளையாடி மணியொலிப்பான்
நாதமெனப் புலவருக்கு நல்லியலைக் கொடுத்திடுவான்
காதையிலே முருகனருள் கண்டவர்கள் பலரிருக்கும் -பள்ளம்

(18)
தாய்போலும் தங்கமுருகன்!

பல்லவி

தாயினைப் போலொரு தண்ணொளி பரவிட
நீயருள் செய்கின்ற நிலமல்லவா முருகா.. –தாயினைப்
அனுபல்லவி

கோயிலும் சுனையும் குடிகளும் இலங்கும்
குமரக்;;;; கோட்டம்;நின் குடிலல்லவா முருகா .. -தாயினைப்
சரணம்

கல்;லுப்பு ளித்துநெல்லுக் கதிர்கொட்டி ஆடுகின்;ற
சொல்லுக்கு ளித்துவரும் சிந்துர(த்;து) வயல்முருகா
அல்லும் பகலுமு(ன);னை ஆராவ திக்கையிலே
எல்லையில்லா இன்பமது எனக்கருளும் வேல்முருகா -தாயினைப்

வள்ளிதெய்வ யானையொடு வாசலிலே எழுந்தருள
உள்ளமொரு மத்தாப்பாய் ஓடிவிரிந் தாடுதையா!
பள்ளம்புல முருகா பாவெடுத்;துத் தந்தருளும்
வள்;ளலே செந்தூரா மயிலேறும் வடிவேலா.. –தாயினைப்

(19)
பள்ளம்பலம் வதியும்
உள்ளக்குமரன்


பல்லவி;
பள்ளம்புலம் வதியும் உள்ளக் குமரனவன்
பாரெனக்குக் காட்டுவித்த பாச இறைவன்.. நல்ல -பள்ளம்...

அனுபல்லவி
வெள்ளவயல் சூழ்ந்திருக்க வீற்றிருக்கும்; வேல்;முருகன்
சொல்லியெனைக் கனடாவில் சேர்த்துவிட்ட மால்மருகன்..அழகுப் -பள்ளம்

சரணம்
ஓரிரவு என்விழியில் உமைபாலன் கோவிலிலே
நானிருந்து பாடுகிறேன் நம்பியெனைப் பிடித்து
வாரெடுத்து விளையாடி வண்ணமிட்டான் காலையிலே
நீருடனே வாருமென்;ற நீட்டோலை வந்ததையா!.. ஐயன்
-பள்ளம்

சோதனைக்குப் பாதைசொல்வான் சுந்தரத்துத் தமிழளித்தான்
வீதிவழி வீற்றிருந்து விளையாடி மணியொலிப்பான்
நாதமெனப் புலவருக்கு நல்லியலைக் கொடுத்திடுவான்
நாடிவந்து அருள்கொடுத்து நாழியிலே மறைந்திடுவான்..அற்புதப் -பள்ளம்

(20)
கோலமயில் முருகன்வாழ் குமரக்கோட்டம்!


வேலணையும் சரவணையும் மயிலப்; புலமார்
விரிந்தவயல் நிலம்நாடி வீற்றே யிருக்கும்
கோலமயில் முருகன்வாழ் குமரக் கோட்டக்;
கோயிலெனச் சிந்துரநின் குடிலே கண்டேன்
பாலவடி வானவனே பாவை வள்ளிப்
பக்கத்தில் தெய்வானைப் பதமும்; சூழச்
சோலையிடும் சிவமைந்தன் சிறப்புப் பாடச்;
செம்;பவளத் தொளிகாட்டும் திருவே கண்டேன்!

ஆடுகின்ற மாமயிலும் அஞ்சேல் என்கும்
அருள்;;கின்ற வேல்காட்டும் அழகே என்றும்
பாடுகின்ற உன்தமிழே பக்தி யாகிப்
பரவுகின்ற செங்;கழலே பயிலக்;; கண்;டேன்
மூடுநிசி வேளையிலும் மணியே கேட்;கும்
முருகாவுன் விளையாடல் மோகம் கண்டோர்
கூடுகின்;ற பெருஞ்;சாரக்;; குமரக் கோட்டம்
கொஞ்சுமயில் வாகனவுன் கோலம்; தானே!

(21)
கவிகொடுக்கும் கந்தன்!


பள்ளம்புலம் வதியும் வள்ளிக் கணவனவன்;;
உள்ளத்தில் நிறைந்தானடி-கிளியே
உள்ளத்தில் நிறைந்தானடி!
தில்லை நாதனுமே நல்ல கவிபடைக்க
தேனாய் இருந்;தானடி-முருகன்
தேனாய் இருந்தானடி!

அள்ளும் கவிகொடுக்க தௌ;ளு தமிழ்ப்புலவர்
துள்ளித் திரிந்தாரடி-கிளியே
துள்ளித் திரிந்தாரடி!
பள்ளம் புலமுருகன் வெள்ளம் எனக்கொடுக்கும்
பாட்டுக்கு எல்லையில்லை-கிளியே
பாட்டுக்கும் எல்லையில்லை!
(தில்லைநாதன் பள்ளம்புலம் தில்லைநாதப் புலவர்)

(22)
சிவபாலா!
சிவபாலா சிவபாலா-எம்மைச்
சேவிக்க வந்த சிவபாலா
தவபாலா தவபாலா-எங்கள்
தங்கக் குடமே தவபாலா! -சிவபாலா

குமரேசா குமரேசா-குமரக்
கோட்டத்து அரசே குமரேசா!
உமைபாலா உமைபாலா-எங்கள்
உயிருடன் கலந்த உமைபாலா! -சிவபாலா

பாலபாலா பாலபாலா
பக்திக் கனலே பாலபாலா!
வேலவேலா வேலவேலா
வித்துவக் கனலே சிவபாலா! -சிவபாலா

சிவபாலா சிவபாலா-எங்கள்
சோதியாய் நின்றாய் சிவபாலா!
குகபாலா குகபாலா-எங்கள்
குடும்ப விளக்கே குகபாலா! -சிவபாலா
(23)
ரொறன்ரோக்
கந்தனே.. கந்தனே..


பல்லவி
கந்தனே கந்தனே –ரொறன்ரோக்
கந்தனே கந்தனே.. -கந்தனே.

அனுபல்லவி.
சிந்தையிலே எந்தனுக்குச்
சேவித்த திருமுருகா சுந்தரா சிவபாலா -கந்தனே..

சரணம்
கருணை பொங்கும் கந்தனே அந்தக்
கைலை ஈசன் மைந்தனே
அருள் கொடுக்கும் வேலனே என்றும்
அஞ்சேல் என்னும் பாலனே.. -கந்தனே..

தேடிவந்த அடியவர்க்குத் தினம்
துன்பம் தீர்க்கும் தேவனே
நாடிவந்தோர் வேண்டும் வரம்
நல்குமருட் குமரனே..! -கந்தனே..

பால னாக ஞான வேத கான மாக ஒளிர்பவன்
சீல னாக தேவ னாக தீய மாந்தர் மாய்ப்பவன்
வேல னாக வீர னாக வேங்கை யாக நிற்பவன்
மோதி சூரன் வீழ நாடு வாகை யாகக் காப்பவன் ..கந்தனே!

(24)
மொன்றியல் நகர்வாழும் முக்கண்ணன் மைந்தன்!


எடுப்பு
மொன்றியல் நகர்வாழும் முக்கண்ணன் மைந்தனே..
முன்வினைகள் போக்கிவிடும் முத்தமிழின் மன்னனே..-மொன்றியல
;
தொடுப்பு
பொன்புகலும் துருவத்திலே புகுந்ததொரு நாள்முதலாய்
எந்தனுக்கு அருள்கொடுத்த ஏறுமயில் வாகனனே.. -மொன்றியல
;
முடிப்பு
ஐந்துகோடி வெள்ளியிலே ஆலயத்தைக் கண்டவனே
அடியவர்கள் துயர்தீர்த்து ஆனந்தம் கொண்டவனே
சிந்துமகள் வள்ளிதெய்வ யானையொடும் நின்றவனே
தேரோடும் திருமுருகா தேசநல்லை வருமுருகா.. -மொன்றியல

(25)
துர்க்கை அம்மாள்!


பல்லவி
தெல்லிநகர் வாழுகின்ற துர்க்கை அம்மா- எங்கள்
தேசமொடு நாளினிக்கும் காளி அம்மா- வண்ணத் - தெல்லிநகர்

அனுபல்லவி
செல்விமகள் தங்கம்மா தெய்வமா கினாய் அவள்
திருப்பணியில் பேரொளியாய் தினமுமா கினாய் -தெல்லிநகர்

சரணம்
பாரெல்லாம் உந்தனுளப் பாங்கு கண்டோம்
படைவீடு போற்கோவில் பளிங்கு கண்டோம்
நீரெல்லாம் பனியாகும் நிலத்தில் வந்தே
நின்றருளும் துர்க்கையுன் நிழலில் நின்றோம்.. –தெல்லிநகர்

மொன்றியலில் ரொறன்ரோவில் கோவில் கண்டோம்
மேதினியாம் இலண்டனிலே வீடு கண்டோம்
செந்தமிழர் வாழுமிடம் எங்கும் தோன்றி
துர்க்கையுன் திருவுருவச் சோதி கண்டோம்.. –தெல்லிநகர்

(26)
ஓம்சிவ.. ஓம்சிவ!


ஓம்சிவ ஓம்சிவ ஓம்சிவ ஓம்!
ஓம்சிவ ஓம்சிவ ஓம்சிவ ஓம்! -ஓம்

உலகநாதா பரமார்த்தா
உமையவள்நாதா உயிர்வதனா
அகிலநாதா நால்வேதா
அற்புதம் புரியும் கண்ணுதலா! -ஓம்

கைலையங்கிரியின் கைலாசா
கங்கையைச்சுமந்த திரிசடையா
சிதம்பரஈசா திருநடனா
திருக்கேதீஸ்வரத் திருமுதல்வா.. -ஓம்

கோணேஸ்வரத்துக் கொற்றவனே
குவலயமெல்லாம் வீற்றவனே
முன்னேஸ்வரத்து முதல்மகனே
முத்தமிழ்பாடும் முக்கணனே! -ஓம்

தேவர்கள் காக்க நஞ்சுண்டாய்
தருமியைக் காத்க இசைதந்தாய்
ஆவதும் அழிவதும் உன்னசைவே
அகிலத்து இறையே சங்கரனே -ஓம்

(27)
நாச்சிமாகாளி!


பல்லவி
மேருபுரம் வாழுகின்ற மாகாளி-உன்னை
விதந்துதமிழ் பாடுகின்றேன் என்தேவி! - மேருபுரம்

அனுபல்லவி
ஊருதொறும் வாழுகின்ற எங்கள் தமிழர்
ஊழிமகள் உந்தனுக்குக் கோவில் அமைத்தார் -மேருபுரம்

சரணம்
காவல்மகள் நீயுமெங்கள் களத்தைப் பாரடி-அந்தக்
கனித்தமிழர் போரெடுக்கும் உளத்தைப் பாரடி!
சூலமொடு எல்லையிலே தேவி நில்லடி-சிங்கத்
தீயவரின் நெருப்பழித்துத் தேசம் காரடி! -மேருபுரம்..


28)
காளியம்மா காளியம்மா வா வா வா!

காளியம்மா காளியம்மா வா.. வா.. வா..
காத்தருளும் தெய்வமம்மா வா.. வா.. வா..
ஊழிமுதல் ஆதியம்மா வா.. வா.. வா..
உமையவளின் சக்தியம்மா வா.. வா.. வா..!

ஓங்கார அம்மனே வா.. வா.. வா..
உலகண்டம் காப்பவளே வா.. வா.. வா..
நீங்காத துயர்துடைப்பாய் வா.. வா.. வா..
நிலப்போரின் நாயகியே வா.. வா.. வா..!

திரிசூலக் கரத்தாளே வா.. வா.. வா..
தேசுதரும் வரத்தாNளெ வா.. வா.. வா..
பாசாங் குசம்கொண்டாய் வா.. வா.. வா..
படைவட்டப் படைகொண்டாய் வா.. வா.. வா..!

கபால மாலையிட்டாய் வா.. வா.. வா..
கட்டளைகள் நீயிடுவாய் வா.. வா.. வா..
நெருப்பாடும் கூந்தலினாய் வா.. வா.. வா..
நெஞ்;சக்;கனல் அம்மனடி வா.. வா.. வா..!

நீளநாக்கு சிவந்திருப்பாய் வா.. வா.. வா..
நீறாக்;கும் சுடலையம்மா வா.. வா.. வா..
வாளேந்தும் வடிவம்மா வா.. வா.. வா..
வாகைதரும் தெய்வம்நீ வா.. வா.. வா..!

(29)
வீரமா காளியே!


தொகையறா
வீரமா காளியே வெற்றியுமை தேவியே
சூரியர் சந்திரச் சுந்தரியே-பார்வதிதன்
குண்டலிக சக்தியே கூற்றுவம் ஓடவைத்து
அண்டம் அதிர்ப்பவளே ஆதி!

பல்லவி
வீரமா காளியே வெற்றிதரும் தேவியே
ஆரமணி அம்மனே அடியவரின் சோதியே.. –வீரமா

அனுபல்லவி
தேரோடும் நல்லையிலே திருவீதி கொண்டவளே
வார்ப்பிளம்பு சக்தியென வந்துநிற்கும் ஆதியே! -வீரமா

சரணம்
பாரோடும் ரொறன்ரோவில் பதியிருப்பாள் மேருபுரம்
பண்ணெடுத்துப் பாடுகையில் பாசமிடும் கருணையுளம்
வாரோடும் கண்ணீரி;ல் வந்ததுயர் தீர்த்திடுவாள்
வல்லமை ஆர்த்திடுவாள் வாகைநிலம் காத்திடுவாள்! -வீரமா

செஞ்சடையில் நெருப்புவரும் திருவிழியில் அனல்பொழியும்
அஞ்சலென எழுந்துவந்தால் ஆர்த்துவரும் திரிசூலம்
கையிருக்கும் கபாலம் காத்திருக்கும் அங்குசமே
மெய்யிருக்கும் தெய்வமம்மா வெற்றிதரும் காளியம்மா..! -வீரமா..

30)
தெய்வமெலாம் பாடிநின்றேன்..
திரும்பிப் பாருங்கள்..

பல்லவி
தெய்வமெலாம் பாடிநின்றேன்
திரும்பிப் பாருங்கள்!-எங்கள்
மெய்வருத்தும் தமிழ்மண்ணை
விடியல் சேருங்கள் -தெய்வமெலாம்

அனுபல்லவி
பொய்யுமிழும் தீயர்வந்து
பூமி அழித்தார்-சொந்தப்
பொன்கொழிக்கும் தமிழர்நிலம்
புகுந்து எரித்தார்.. எங்கள்.. -தெய்வமெலாம்

சரணம்
கைகளிலே ஆயுதத்தைக் காலம் கொடுத்தே
கனிநிலத்தைக் காக்கவென வேங்கை பிறந்தான்!
கொல்கயவர் வல்லுறவர் கூட்டி எரிக்கும்
கொடும்வாதைக் கூட்டமதை வென்று நிலைக்க -தெய்வமெலாம்

(31)
என்னுயிரில் நெஞ்சமிட்ட
இன்பத் தமிழே..!


தொகையறா
நினைத்தபொழு தார்த்துவந்து நெஞ்சம் ஆகி
நிலமாளும் கவிதையொடு நிசமே யாகி
மனப்புகலும் மன்றினொடும் வசமே யாகி
மண்மறவர் வீரமனம் வார்ப்பே ஆகி
அனைத்துலகத் தமிழர்பால் அமுதே ஆகி
அன்னையெம் மொழியென்ற அழகே யாகி
இனத்துறையும் செந்தமிழே இன்பத் தாயே
எந்தனுளம் வந்தொருகால் இரட்சிப் பாயே!

பாடல்
அன்னையாம் நல்லாள் கல்வி
அறிவதைத் தந்தாள் தெய்வ
நன்னெறி சொன்னாள் அந்த
நயப்பினில் தமிழாள் வந்தாள்
கன்னலும் பாலும் சேர்த்து
கவிதையாய் ஊட்டி விட்டாள்
அன்னவள் தமிழாள் என்னுள்
ஆலயம் அமைத்தாள் அம்மா!

மண்மீது நிற்பாள் எந்;தன்
மனவோசை கேட்டால் ஓடி
எண்ணத்தே வருவாள் பாட்டு
இசையாகி மீட்பாள் வெற்றி
வண்ணமே சொல்வாள் நாளை
வருமீழம் என்பாள் அந்தப்
பெண்ணொடு வந்தேன் என்னைப்
பிரிவிலாள் தமிழே அன்றோ!


(32)
துர்க்கேஸ்வரத் துர்க்கையம்மா!


பல்லவி
துர்க்கேஸ்வரம் வதியும் துர்க்கையம்மா-எங்கள்
தொல்வினைகள் போக்கிவரும் தெய்வம்மா ..அம்மா-துர்க்கேஸ்வரம
;
அனுபல்லவி
அர்ச்சனைகள் உந்தனுக்கு ஆயிரமாம்-செவ்வாய்
அருள்கொடுக்கும் அற்புதமோர் பாயிரமாம் ..அம்மா -துர்க்கேஸ்வரம
;
சரணம்
கற்பனையில் இல்லையுந்தன் காணருளே-துயர்
கண்டுருகப் பயன்பெறுவார் பேரருளே
அற்புதங்கள் சாற்றிவரும் அங்குசத்தாய்-என்றும்
அழகொளிரக் காட்சிதரும் அருள்வடிவாய்.. அம்மா -துர்க்கேஸ்வரம்

தேரோடும் மாமதுரைத் திருவுளத்தாய்-எங்கள்
துன்பங்கள் பறந்தோட அருள்கொடுப்பாய்..
பாரோடும் உந்தனுக்கோ ஆலயங்கள்-ரொறன்ரோப்
பதிகொடுக்கும் துர்க்கையுந்தன் தரிசனங்கள்..அம்மா -துர்க்கேஸ்வ

(33)
குக்கூ குக்கூ குயிலக்கா..!



எடுப்பு
பூங்குயிலே பூங்குயிலே-நீ
போனஇடம் தெரியலையே -பூங்

தொடுப்பு
ஏங்கியுனைக் குக்கூ வென்ற
என்னழைப்பும் கேட்கலையே? -பூங்

முடிப்பு
ஓரிரவுக் குள்ளேயெங்கள்
ஊர்விழுந்து போச்சுதடி
வேர்பிளந்த மாமரத்தில்-உன்
வேய்ங்குரலும் போச்சுதடி! -பூங்

தாயிருந்த மணிநிலத்தில்
நீயிருக்க வழியில்லையே
கூவியுனைக் குக்கூவென்று
கூப்பிடநீ ஊரில்லையே! -பூங்

குமரக்கோட்டம் முருகன்மணிக்
கோவிற்பக்கம் போகவில்லை
ஆமிவந்து போதையிலே
அடிதடிகள் முடியவில்லை -பூங்

நானிழந்த நிலமடியில்
கானிழந்து நீபறந்தாய்
தேனழைந்து குக்கூவென்று..
குக்கூவென்று குக்கூவென்று
நீயழைக்கும் நாள்வருமா?-அடி
நீயழைக்கும் நாள்வருமா? -பூங்

(34)
வந்துவிடு வந்துவிடு!


வெண்பா
வரசித்தி நாயகா வாரணக் கையாய்
உரமாகி என்தமிழை ஏற்பாய்-அரமாகி
வன்கொடுமை கண்டு வாரிறைக்கும் கண்ணீரைத்
நின்னருளைத் தான்கொடுத்து நீக்கு!

பல்லவி
வந்துவிடு வந்துவிடு
வாரணனே வந்துவிடு
தந்துவிடு தந்துவிடு
தமிழீழம் தந்துவிடு -வந்துவிடு
அனுபல்லவி
நொந்துமிக ஊரழிந்து
நெட்டூரம் கொட்டிவர
சிந்திவிழும் கண்ணீரைத்
துடைத்துநீ அருள்கொடுக்க.. –வந்துவிடு

சரணம்
நாரிழந்த மாலையென
நாதியற்ற ஓரினமாய்
ஊரிழந்து போகுதையா
உன்குடிலே சாகுதையா
பாரிசாதப் பூத்தொடுக்க
பட்டவிடம் தேனிறைக்க
வேரிழந்த மண்ணின்மடி
விக்கினனே நீயருள்வாய்!
விக்கினனே..விக்கினனே..
விக்கினனே நீயருள்வாய்.. –வந்துவிடு..



(35)
நல்லமணி

பல்லவி
நல்லமணி வந்துவிழ
நங்கையெழில் சிந்திவர
பொங்குதமிழ் முந்திவர
பூத்திடுமா எங்கநிலம் என்றும்.. -நல்லமணி

முல்லைநிலம் வன்னிநிலம்
மொய்பவள மன்னார்நிலம்
எல்லையிலாக் கடல்நீளம்
இருக்குமெழில் நிலமனைத்தும்..-நல்லமணி

சரணம்
நல்லையிலும் சன்னதியும்
வற்றாப்பளை அம்மனுக்கும்
எல்லையிலே முன்னேஸ்வரம்
ஈஸ்வரியாம் நயினையிலும்
மாமாங்கம் கதிர்காமம்
மாகாளித் திரியாயும்
எல்லாமும் விடியலிட
எங்கநிலம் பூக்குளிக்கும்.. –நல்லமணி

உயிர்கருகிப் போகுமிந்த
இசைநிலத்தில் தேனழைந்து
உயிர்கொடுக்க வருமோடி
எங்நிலம் விடுதலையே
பயிர்கருகிப் போகுதம்மா
பசுமரங்கள் சாகுதம்மா
செயிரெடுதத் தேசநிலம்
செயக்கூடல் ஆகுமம்மா.. –நல்லைமணி


(36)
ஆச்சியைப் போற்றுவோம்!
எடுப்பு
ஆச்சியுனைப் போற்றுவோம்
ஆச்சியுனைப் போற்றுவோம்!-எங்கள்
ஆயுளுள்ள காலம்;வரை.. -ஆச்சியுனைப்

தொடுப்பு
பேச்சிலொரு மாலைகட்டி வெற்றிலையைக் குதப்பியொரு
வீச்சிலொரு நடைபயின்று வீடுவரும் எங்;களுயிர்.. -ஆச்சியுனைப
;
முடிப்பு
நாச்சிமார் கோவில் நல்;லவரம் அருளுகின்ற
பூச்சதங்கை முருகனொடும் பெருங்காவல் ஐயனொடும்
சுற்றவயல் வைரவரின் திருக்கரங்கள் கூட்டியெமைப்
பற்றுவைத்த தாயவளே பாடல்தந்த பொன்னுளமே.. -ஆச்சியுனைப்

மாரியம்மன் வீதியிலே மடியிட்டு வலம்வந்து
நேர்த்திவைத்துக்; கும்பிட்டு நிலமடியில் வாழ்ந்தவளே
தாயவளே தண்ணமுதே தங்;கமணித் தெய்;வமகள்
ஆயவளே அற்புதமே அமைதிப் பொற்;குடமே..! -ஆச்சியுனைப்

(36)
தொல்வினைகள் தீர்த்தருளும்
நல்லை முருகன்!


பல்லவி எடுப்பு
தொல்;வினைகள் தீர்த்தருளும்
நல்லை முருகா..என் -தொல்வினைகள்

தொடுப்பு
வல்வினைகள் அல்லலெல்லாம்
வரமளித்துப் போக்கிடுவான்
நல்வினைகள் உவந்தளித்து
நற்பதங்கள் காட்டிடுவான்..எங்கள்.. -தொல்வினைகள்..

கண்ணிகள்
கானவள்ளிக் குறமகளைக் காதலித்து வென்றவன்
கனிமகளாம் தெய்வயானை கனிந்தெடுத்து நின்றவன்
வானமரர் போற்றிநிற்கும் ஆறுபடை யானவன்
வைகையெலாம் நீரளிக்கும் வண்ணமழை போலவன்..எங்கள்
-தொல்விiனைகள்

நற்தமிழால் பாடுகின்;ற நல்லைநகர் இருப்பவன்
நாடிவரும் அடியவர்க்கு நற்கதியைக் கொடுப்பவன்
சொற்தமிழில் பரவிவரும் தீங்கவிஞர் ஏற்;பவன்
சுதந்திரத்தை வெல்லுகின்ற தேசநலம் காப்பவன்..எங்;;கள்
-தொல்வினைகள்..

(37)
ஐயப்பன் புகழ்பாடுவாய்!


பல்லவி
ஐயப்பன் புகழ் பாடுவாய்-மனமே
ஐயப்பன் புகழ் பாடுவாய் -ரொறன்ரோ -ஐயப்பன்

பல்லவி எடுப்பு
மெய்யப்பன் துதிபாடி வேண்டுவரம் நீநாடிக்
கையெடுத்;துக்;; கும்;பிடவே கனிந்தருளும் தெய்வமவன் -ஐயப்பன்..

கண்ணிகள்
பொய்மகனாய் வாழாதே புத்திகெட்டுப் போகாதே
பேதலித்து நீதிரிந்து பிடிசாம்பர் ஆகாதே
மொய்கொடுக்;கும் ஐயப்பன் வெண்பனியில் வீற்றிருந்து
கைகொடுக்கும் அப்பனைநீ காலமெல்லாம் மறவாதே! -ஐயப்பன்

ரொறன்ரோவின் சபரிமலை கோவிந்தப் பசனைஒலி
திறம்பாடி நாளெல்லாம் திரளுகின்;ற மெய்யடியார்
அறம்;பாடி மாலையிட்டு அய்யப்பன் எனக்கூவிச்
சிறந்தார்க்;கு அருள்செய்யும் சிங்காரக் கோவிலவன் –ஐயப்பன்..

(38)
எம்மொழியே செம்மொழியே!


தொகையறா
தேனமுதே தித்திக்கும் கனியமுதே!
தீந்தமிழாய்க் கவிகொடுக்கும் திவ்வியமே!
மானத்து வாழ்வுதரும் மருக்கொழுந்தே!
மண்மகளே செந்தமிழே வாழ்கவாழ்க!

எடுப்பு
தமிழே தங்கத் தமிழே-நீ
தந்தாய் எங்கள் உயிரே..! -தமிழே

தொடுப்பு
அமிழ்தே மண்ணின் அழகே
அறிவே அறிவின் ஊற்றே.. –தமிழே..
முடிப்பு
கனலாய் வந்து உதித்தாய் எங்கள்
கண்ணாய் நிலத்தைப் பதித்தாய்
அனலாய்ப் பற்றி எழுந்தாய் எங்கள்
அன்னைப் பகைவன் எரித்தாய்.. –தமிழே

ஆதிவந்த செம்மொழியே குறள்
ஆக்கியளித்த அரும்மொழியே
வீதிகாட்டில் வந்தமொழிகள்-உனை
வீழ்த்த முடியுமோ பசுங்கிளியே! -தமிழே

(39)
எம்மொழியே செம்மொழியே....!



எடுப்பு
தித்திக்கும் தேனமுதே-தமிழே
தித்திக்கும் தேனமுதே! என்றும் -தித்திக்கும்

தொடுப்பு
எத்திக்குப் போனாலும் -நான்
எதைமறந்து போனாலும்
கொத்துகவி தந்துநிற்கும் -என்
குலமகளாய் வந்துலவும்.. -தித்திக்கும்
முடிப்பு
பொதிகைமலை ஊற்றெடுத்த பூவை யல்லவா-நீ
பொங்குதமிழ் நெஞ்சுரத்தின் பாவை அல்லவா?
அதிரும்மண் ஈழவயல் அழகி அல்லவா-நீ
அருளுகின்ற போர்ப்படையே புலிகள் அல்லவா.. –தித்திக்கும்

மோகனமே கல்யாணி ஆனந்த பைரவியே
சீதனமே உந்தனுக்குச் சிந்து பைரவியே
பூபாளம் நான்பாடும் புலவன் அல்லவா-உன்னைக்
க(h)னடாவில் இசைபரப்பும் காந்தன் அல்லவா... –தித்திக்கும்

(40)
தமிழவள் எந்தன் பராசக்தி..!


பல்லவி
செந்தமிழே பொன்தமிழே தேவி சக்தி –எந்தன்
சிந்தனையில் நீயெழுந்தால் தேரும் பக்தி.. -செந்தமிழே

அனுபல்லவி
அந்தமிலாச் செம்மொழியே ஆதி சக்தி-விடியல்
அருள்கொடுக்கும் திருமொழியே அருள்வாய் சக்தி -செந்தமிழே

சரணம்
நாடுவிட்டு நாடுவந்தும் நான்மறப்பனோ-எந்தன்
நாவிருக்கும் தேவியுன்னை நானிழப்பனோ?
கூடுவிட்டுக் கூடுபாயும் குரங்குவல்லவே-எந்தன்
கொஞ்சுதமிழ் நெஞ்சைவிட்டுக் போகுமல்லவே. -செந்தமிழே

தூவிவரும் இசைவடித்து தினமிருப்பேன்-உன்னைத்
திக்கெல்லாம் பாவெடுத்துக் கனிகொடுப்பேன்
ஆவியென நின்றுபுலி ஆர்ப்பவளே-எங்கள்
அருந்தமிழே இரும்தமிழே அன்னை தமிழே.. -செந்தமிழே

No comments:

Post a Comment