Sunday, December 28, 2008

மார்கழி மகாத்மியம்-2008

மார்கழி மகாத்மியம்

மார்கழிக் கோலம் வரிசையாய் நிமிர்ந்தன
ஊர்அயல் நாடுகள் ஊண்டி அழைத்த
மகிந்தக் கோனார் மணிக்கொரு தடைவை
அகிலத் தெல்லாம் அளந்தார் வன்னித்
தலைநகர் கிளிநொச்சி தன்படை வெல்லும்
உலைவாய் ஊடக உலகத் துள்ளோர்
வந்து பார்த்து வரைபடம் போடுவீர்
இந்தத் தடைவ இதுதான் நடக்கும்
என்றே அழைத்தார் இடித்துப் பார்த்து
கொன்று குவிக்கக் கொத்துக் குண்டுகள்
அனுப்பிப் பார்த்தார் ஆயிர மாயிரம்
எனும்படை அழிவை எட்டிப் பார்த்தார்!
குஞ்சிப் பரந்தன் உருத்திர புரத்து
அஞ்சாப் பூமி அயலுகள் எல்லாம்
சிங்களப் படையார் செத்து விழுந்தனர்!
திருமுரு கண்டி திக்காய்ப் புலிக்குளம்
வரும்படை இந்தா வருகுது என்றார்!
இரண மடுவின் எழிற்கரை யோரம்
பரண்கள் அமைத்துப் படுத்தவர் எல்லாம்
புலிப்படை எடுத்த பொறியின் அடியில்
எலிப்படை யாக எடுத்தனர் ஓட்டம்!
பத்தை வயலில் படுகுழி வெள்ள
பொத்தில் எல்லாம் பொரிந்தது பிணங்கள்!
இன்று இந்தப் பொழுதை எழுதும்
முன்றில் அலம்பில் முழுப்படை சிங்கர்
கூட்டி அள்ளிக் கொடுத்த வாயுதம்
பாட்டில் கிடக்கும் படைப்பிண நிரைகள்
இணையத் தளத்தில் இடுகைக் களத்தில்
கணனிக் கட்டில் கக்கிய தறிவீர்!
சிறுவர் படையில் சிங்களம் சேர்க்கும்
அறுவைச் சிகிச்சை அம்பல மாகிட
ஊட்டுக் ஊடு உடல்கள் சிறுவரைக்
காட்டும் கோலமும் கனிணியில் வந்தன!
போனவன் வந்தவன் பொல்லாக் காடையன்
ஆனவன் எல்லாம் அள்ளி எடுத்து
போனது படையென பிடிகிளி நொச்சி
யானது என்றே யாப்புகள் கொடுத்து
சரத்பென் சேகா, சண்டியன் கோத்தன்
உரத்துப் பிடித்து ஊன்றினர் எனினும்
சடலப் பவனி சராசரிச் சிங்களப்
பொடிமாத் தயாவை புரட்டி எடுத்தது!
அடிஅடி என்று அனுப்பிய படையை
பிடிபிடி என்று பிணமாய்த் திரும்பின!
கேகலி இப்போ கிளிநொச்சி இல்லை
போகலாம் என்கப் பாரின் நிருபர்கள்
பொல்லா நாட்டில் பொழுதைக் கழிக்க
எல்;லாம் போயிடும் என்றே பறந்தனர்!
ஈழத் தலைமை எடுத்துபா நடேசன்
ஆழந் தெரியா அரசப் படைகள்
வீழப் போகும் வேளை இதுவென
சூழப் போகும் சுரிதியை உரைத்தார்!
தமிழகத் திருந்து திருமா வளவன்
தமிழீ ழத்தை அங்கீ கரிக்கும்
உரிய நிகழ்வை உலகம் தெரிய
விரிந்து பரந்து விடுத்தறை கூவல்
எடுத்து உண்மையின் ஏடு தொடக்கினார்!
தடுக்கப் பார்த்த தமிழகக் காங்கிரஸ்
இராச பக்சா இரகசியத் தொடர்பை
உராய்ந்த செய்திதான் உலுப்பிய தறிவீர்!
புலிப்படை இன்னும் பொறுமைதான் உடையோம்
வலிந்த தாக்குதல் வரையெதும் புரியோம்
வரும்படை தன்னை வடித்துத் துடைக்கும்
இரும்பொறை ஒன்றே இந்த நேரத்தில்
எடுக்கிறோம் இன்னும் எல்லாக் கருதலும்
அடுக்கிய பின்னே அணிவகுத் திடுவோம்
மண்ணின் பிடியை மதித்துவெம் உலகீர்
எண்ணி நடப்பீர் இதுவும் பொழுதென
தேசிய ஈழம் திக்கெலாம்
பூசிய மார்கழிப் பொழுதைக் கொடுத்ததே!

-புதியபாரதி






No comments:

Post a Comment