Friday, August 28, 2009

சாகவோ இன்னும்..இன்னும்!




இந்தநூற் றாண்டின் கெட்ட
இராட்சதன் இவனே என்க
வந்திடும் செய்தி காட்டும்
வடிவத்தைப் பார்த்தோம்! அந்தோ
கந்தகத் தீயில் ஈழக்
கனிநிலம் எரித்த பின்னும்
குந்தகன் நின்றா னில்லைக்
கொடியவன் அரக்கம் பாரீர்!

வெற்றுடல் ஆக்கிக் காலால்
வீழ்த்திய பின்னாற் சுட்டுப்
புற்றிலே சடலம் போடும்
புல்லரைப் பாரும் அம்மா!
கற்றிலா மூடர் அற்பக்
கயவரை நம்பிப் பாம்புப்
பற்றையான் கூட்டுக் குள்ளே
பாய்ந்ததாய் முடிந்து போச்சே!

நரகாசு ரன்கள் என்க
நர்த்தனம் போடும் ஆட்சிப்
பரதேசிக் கயவர் எம்மைப்
பாகுபா டின்றி வைத்த
வரலாறு என்றும் உண்டா?
வடிவமே கொலையும் கொள்ளைக்
கரமேதான் உடையார் இந்தக்
காலமும் அழித்தே விட்டார்!

பாணந்து றையி லன்றப்
பார்ப்பன ஐயர் கொன்றார்
நாணமே யில்லா ரிந்த
நாள்வரை தொடரு கின்றார்
மாணறி வுள்ளார் சில்லோர்
மதியுரை பகர்ந்தும் என்ன?
பேணறி வில்லார் ஆட்சிப்
பேயரே வெறியாய் நின்றார்!

இந்திய நாடு செய்த
இழிசெயல் தன்னிற் றானே
வெந்துசாம் புகையாய்ப் போக
வீழ்ந்தது தமிழன் பூமி!
குந்தகம் செய்தார் இந்திக்
கொடியர்காங் கிரசுக் கும்பல்
சிந்தையில் இல்லார் சிங்கச்
சேனைக்குள் நுழைந்து வந்தார்!

கன்னியர் தாமும் வல்ல
கனித்தமிழ் இளையோர் பிஞ்சுச்
சின்னரும் பாலர் மூத்தோர்
சீரிய அறிஞர் எல்லாம்
பின்னிய வரக்க னாலே
போயினர் சடல மாகச்
சென்னியை உசுப்பா விட்டால்
சாகுமெம் சாதி தானே!
-புதியபாரதி

1 comment:

  1. வணக்கம் புதியபாரதி

    உங்கள் கவிதைகளை படித்தேன். தாயக நிலையை படம்பிடித்து காட்டும் உங்கள் கவிதைகள் நன்று.

    உங்களுடைய ஆக்கங்கள் ஈழநேசன் இணைய தளத்தில் இடம்பெற விரும்புகிறோம். ஆர்வமிருப்பின் editor@eelanation.com எனும் முகவரியில் தொடர்புகொள்ளுஙங்கள்.

    நன்றி

    ReplyDelete